பாகிஸ்தானில் தாலிபான்களின் மிரட்டலை தாண்டி நடக்கும் போலியோ முகாம்
போலியோ நோயை ஏற்படுத்தும் வைரஸ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியாவில் உள்ள பலரை தாக்கி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கக் கூடாது என்றும், மீறனால் பின்விளைவுகளை சந்திக்கக்கூடும் என்றும் தாலிபான்கள் மிரட்டல் விடுத்தனர்.
மேற்கத்திய நாடுகள் போலியோ மருந்து மூலம் முஸ்லிம்களை மலடுகளாக்கப் பார்க்கிறார்கள் என்று கூறி போலியோ முகாம்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாலிபான்கள் தடை விதித்தனர்.
இந்நிலையில் தாலிபான்களின் மிரட்டலையும் தாண்டி வடமேற்கு பாகிஸ்தானின் கைபர்-படுங்வா மாகாணத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் உள்ள 6 மாவட்டங்களில் உள்ள 1.5 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
கடந்த 7ம் தேதி பெஷாவரில் போலியோ சொட்டு மருந்து கொடுப்போருக்கு பாதுகாப்புக்கு சென்ற வாகனம் மீது தாலிபான்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாகினர். முன்னதாக இந்த மாத துவக்கத்தில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கச் சென்றவர்களை சிஐஏ உளவாளிகள் என்று கூறிய மக்கள் அவர்களை நாய்களை விட்டு துரத்தி அடித்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழுவினரை குறி வைத்து நடந்த குண்டுவெடிப்பில் பாதுகாவலர் காயம் அடைந்தார்.