எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான மம்மி மட்டும் இல்லீங்க... வேற ஒன்னும் இருக்கு!
எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான செயற்கை கால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெய்ரோ: எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான செயற்கை கால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு. கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். இது உலகின் 15வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என கூறப்படுகிறது. மேற்கே லிபியாவையும், தெற்கே சூடானையும், கிழக்கே காசாக் கரை மற்றும் இஸ்ரேலையும் எல்லையாகக் கொண்டது.
வடக்குக் கரையில் மத்தியதரைக் கடலும் கிழக்குக் கரையில் செங்கடலும் எகிப்தின் எல்லைகளாக உள்ளன. எகிப்தின் சினாய் தீபகற்பம் தென்மேற்கு ஆசியாவில் உள்ளதால், இந்நாடு இருகண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

மம்மிக்களுக்கு புகழ்பெற்ற எகிப்து
எகிப்தின் பழங்காலத்து மன்னர்களால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடுகள் உலகப்புகழ் பெற்றவை. எகிப்தில் உள்ள நினைவுச் சின்னங்களான கிசா பிரமிடு உலக அதிசயங்கள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிக்களுக்கும் புகழ்பெற்ற எகிப்து.

மரத்தாலான செயற்கை கால்
இந்நிலையில் எகிப்தில் ஷேக் அப்த் அல்-குவர்னி கல்லறையை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதாவது அந்த கல்லறையில் இருந்து மரத்தாலான செயற்கை கால் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

3000 ஆண்டுகள் பழமையானது
இந்த செயற்கைக்கால் 3000 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இந்த காலானது மதகுரு ஒருவரது மகள் பயன்படுத்தி வந்தது எனவும், அவரது வாழ்நாளில் அந்த செயற்கை காலானாது பலமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறுப்புகளின் முக்கியத்துவம்
இதன்மூலம் மனித உடம்பில் உறுப்புகளின் முக்கியத்துவத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்துள்ளனர் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த செயற்கை காலானது மரத்தால் செய்யப்பட்டுள்ளது.

தோலினால் ஆன வார்
அதில் தோலினாலான வாரை கட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்தக் காலில் கட்டைவிரலில் நகம் இருப்பதை போன்றும் தத்ரூபமாக செதுக்கியுள்ளனர். இந்த செயற்கை கால் குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications