காஸாவில் இறந்த கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த பெண் குழந்தையை உயிருடன் மீட்ட டாக்டர்கள்
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய காஸாவில் உள்ள தேர் அல் பலாலா நகரில் இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு வீடு தரை மட்டமானதில் அதில் வசித்து வந்த ஷைமா அல் ஷேக் கனான்(23) என்ற 8 மாத கர்ப்பிணி இடிபாடுகளில் சிக்கி பலியானார்.
அவரது உடல் தேர் அல் பலாலாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது வயிற்றில் உள்ள குழந்தை உயிருடன் இருப்பதை பார்த்து வியந்தனர். உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். பிறந்த பெண் குழந்தைக்கு ஷைமா அல் ஷேக் கனான் என்று அதன் தாயின் பெயரே வைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் குழந்தை பிறக்கும் முன்பே தாயை இழந்தது பலரையும் கவலை அடையச் செய்துள்ளது.
இது குறித்து இறந்த ஷைமாவின் தாய் மிர்ஃபாத் கனான் கூறுகையில்,
என் மகள் இறந்த துயரம் இருப்பினும் நான் பாட்டியான மகிழ்ச்சியும் உள்ளது. இந்த குழந்தையை கடவுள் தான் எனக்காக பாதுகாத்து கொடுத்துள்ளார். என் மகள் ஷைமா இறந்துவிட்டாள். ஆனால் தற்போது எனக்கு புதிய மகள் கிடைத்துள்ளாள். இந்த குழந்தையும் அதன் தாயை போன்றே என்னை அம்மா என்று அழைக்கும் என்றார்.