நரேந்திர மோடிக்கு ஒபாமா வாழ்த்து! அமெரிக்கா வர வெள்ளை மாளிகை அழைப்பு!!
வாஷிங்டன்: லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் நரேந்திர மோடி அமெரிக்கா வர வேண்டும் என்று வெள்ளை மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.
குஜராத் கலவரம் காரணமாக மோடிக்கு அமெரிக்கா விசா அளிக்க மறுத்து வந்தது. மோடி பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மோடியை சந்தித்துபேசினார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்று நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடியை நேற்று இரவு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். அப்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தீர்மானமான முடிவு கிடைத்துள்ளது. மோடி தலைமையில், உலகிற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக ஒபாமா கூறினார்.
அமெரிக்கா வர அழைப்பு
மேலும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜே கார்னே கூறுகையில், மோடி தலைமையிலான ஆட்சியில், இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு மேம்படும். தேர்தலில் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்துக்கள்.
மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் அவருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளோம். ஜனநாயக மாண்புகள் வலுப்பட, இரு தரப்பு உறவை மேம்படுத்த விரும்புகிறோம். இந்திய பிரதமர் அமெரிக்கா வருவதை நாங்கள் ஆவலுடன் வரவேற்கிறோம் என்றார்.