ஸ்பெயினில் காரை மோதவிட்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு- 2வது தாக்குதல் முறியடிப்பு!!
ஸ்பெயினில் காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
பார்சிலோனா: ஸ்பெயினின் பார்சிலோனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மற்றொரு தாக்குதலை நடத்த முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா ராம்ப்லாஸ் சுற்றுலா பகுதியில் சாலையை கடந்து சென்ற பாதசாரிகள் கூட்டத்தில் மர்ம நபர்கள் ஓட்டி வந்த வேன் திடீரென பாய்ந்தது. வேனை ஓட்டி வந்த தீவிரவாதி தப்பி ஓடினார். இச்சம்பவத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இம்மோதலில் 6 பொதுமக்களும் ஒரு போலீசாரும் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்ட 2-வது தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.