அதிவேக ப்ளட்ஹாண்ட் சூப்பர்சானிக் கார் அக்டோபரில் சோதனையோட்டம்
வரும் அக்டோபர் 26-ஆம் தேதியன்று ப்ளட்ஹாண்ட் சூப்பர்சானிக் கார் சாலையில் வெள்ளோட்டம் நடத்தப்படவுள்ளது.
இதன் சோதனையோட்டம் கார்ன்வாலில் நியூகே விமான நிலைய ஓடுபாதையில் இருந்து குறைவான வேகத்தில் மேற்கொள்ளப்படும்.
அடுத்த ஆண்டு வேகத்தின் அனைத்து சாதனையும் முறியடிக்கும் விதமாக தென்னாப்பிரிக்காவில் களம் இறக்கப்படுவதற்கு முன்பு, அதிவிரைவாக செல்லும் இந்த காரின் சோதனையோட்டத்தை பொறியாளர்கள் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
காரை மணிக்கு 1228 கி.மீ வேகத்தில் செலுத்துவதுதான் தற்போதைய சாதனையாக இருக்கிறது. ப்ளட்ஹாண்ட் சூபர்சோனிக் கார் 1247 கி.மீ மற்றும் 1609 கி.மீ என்ற வேகத்தை இரண்டு கட்டங்களாக எட்டும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், நியூகேயில் நடைபெறும் சோதனையோட்டம் சாதனை நிகழ்த்துவதற்கான முயற்சியில்லை. ஏனெனில், விமான தளத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த முன்னாள் ஓடுபாதை 2,744 மீட்டர் நீளமுடையது. இந்த நீளத்தில் கார் தனது அதிகபட்ச வேகத்தை எட்டமுடியாது.
ஓட்டுனர் ஆண்டி க்ரீன், மணிக்கு சுமார் 322 கி.மீ வேகத்தில் ப்ளட்ஹாண்ட் சூபர்சானிக் காரை செலுத்துவார். யூரோஃபைட்டர்-தைஃபூன் ஜெட் எஞ்சின் மட்டுமே பயன்படுத்தப்படும்.
பொதுவாக வாகனத்திற்கு அதிக வேகத்தை கொடுக்கும் ராக்கெட் மோட்டர், இந்த காரில் பொருத்தப்பட்டிருக்காது. அது இன்னமும் தயாராகவில்லை.
"கணினி வடிவமைப்பில் தொடங்கி, இப்போது ஓடுபாதைக்கு வந்துவிட்டோம். இத்தனை ஆண்டுகளாக எங்களுடன் உறுதுணையாக இருந்தவர்களுக்கு இது ஆறுதலளிக்கும்" என்று தலைமைப் பொறியாளர் மார்க் ஷைப்மைன் கூறுகிறார்.
அவர் இந்த சோதனை ஓட்டத்திற்காக பணம் சேகரிக்க விரும்புகிறார். அது, இறுதிக்
கட்ட தயாரிப்பு பணிகளுக்கு உதவியாக இருக்கும்.
இருப்பினும், சோதனையோட்டத்திற்கு ஊடகங்கள், முக்கிய பிரபலங்கள், ஆதரவாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் 'ப்ளட்ஹாண்ட் 1 கிளப் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
சோதனையோட்டத்தை தொடர்ந்து வரும் சனிக்கிழமையன்று பொதுமக்களுக்காக பிரத்யேக ஓட்டம் நடத்தப்படும். .
காரின் உடற்பகுதியில் உயர் வரையறை கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். சோதனையோட்டத்திற்கு பிறகு, நார்வே விண்வெளி நிறுவனம் 'நாமோ' காருக்கான ராக்கெட் மோட்டாரை வழங்கும்.
இந்த நவீன காரின் அடிப்படை மாடல் தயாராகிவிட்டாலும், ப்ளட்ஹாண்ட் குழு, இதன் திறனை அதிகரிக்க விரும்புகிறது. அதோடு, பரிசோதனைக்கும் கூடுதல் காலம் ஆகலாம்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அக்டோபர் மாதத்தில் தான், த்ரெஸ்ட் எஸ்.எஸ்.சி காரை ஓட்டி, மணிக்கு அதிக வேகம் காரை ஓட்டியவர் என்ற சாதனையை ஆண்டி கிரீன் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம் :
தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்
இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்
வார்ம்பியர் விவகாரம்: கொடூரமான ஆட்சிமுறை என வடகொரியாவை விமர்சித்த டிரம்ப்