ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் - டேவிட் கேமரூன் எச்சரிக்கை
லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வசிக்கும் பெண்கள் ஆங்கில அறிவு பெற்றிருப்பது அவசியம். எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு ஆங்கில தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம்.

அக்டோபர் மாதம் முதல் இந்த கொள்கை செயல்படுத்தப்படும். அதற்குள் தயார்படுத்திக்கொண்டு தேர்வில் வெற்றிப் பெறாதவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். மேலும் வாழ்க்கை துணை விசாவில் இங்கிலாந்தில் குடியேறிய, குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி நிதியை இங்கிலாந்து அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.
இது தொடர்பாக, அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் ‘தி டைம்ஸ்' பத்திரிகையில் எழுதியிருப்பதாவது: இங்கிலாந்தில் குடியேறிய பெண்களில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு போதிய ஆங்கில அறிவு இல்லை என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவர்கள் ஓரளவுக்கு ஆங்கிலத்தில் பேசுகின்றனர் அல்லது சுத்தமாக ஆங்கிலமே தெரியாமலேயே பல ஆண்டாக வசிக்கிறார்கள். அவர்களுக்காக ஆங்கில பயிற்சி வகுப்புகள், அவர்கள் விருப்பப்படும் இடங்களில் நடத்தப்படும்.
5 ஆண்டு வாழ்க்கை துணை விசாவில் இங்கு வரும் பெண்களுக்கு ஆங்கில பயிற்சி அளித்து, இரண்டரை ஆண்டுக்கு பிறகு தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இங்கு தொடர்ந்து வசிக்க முடியும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications