தமிழர்களுக்கு தொடர்ந்து சிறப்பு சேர்க்கும் கனடா.. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
ஆடவா/(கனடா): தமிழர்களின் தோழனாக தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி:
"இன்று கனடாவிலும் மற்றும் உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்

இந்த நன்னாளில் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக ஒன்று கூடியும், புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.. நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் புதிய ஆண்டை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
கனடாவின் வரலாற்றில் 150வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், பலதரப்பட்ட நம்பிக்கைகளை நாம் பெருமைப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இது தான் கனடாவை மக்கள் அமைதியுடன் வாழ்வதற்கு உலகின் மிகச்சிறந்த நாடாக ஏற்படுத்தியுள்ளது. நம் நாடு வலிமையானதாகவும், பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்ததற்கும் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது

நம் நாட்டு மக்களின் சார்பாகவும் எனது சார்பாகவும், மனைவி ஸோபியின் சார்பாகவும் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!"
-இவ்வாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வாழ்த்துச் செய்தியை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட தமிழ் எம்பி கேரி அனந்தசங்கரியும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

பிரதமர் ஆவதற்கு முன்னதாகவே தமிழர்களுடன் மிகவும் நெருக்கமான நல்லுறவு கொண்டவர் ஜஸ்டின் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
- இர தினகர்












Click it and Unblock the Notifications