அமெரிக்கா வாழ் சென்னை விஞ்ஞானிக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு?
நியூயார்க்: அமெரிக்கா வாழ் சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானியான ராமமூர்த்தி ரமேஷுக்கு நடப்பாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2014ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவதற்கு 27 பேர் அடங்கியுள்ள பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷ் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இயற்பியலுக்கான பிரிவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், டோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர் யோஷினோரி டோகுரா ஆகியோருடன் இணைந்து ரமேஷ் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ராமமூர்த்தி ரமேஷ், சென்னையை சேர்ந்தவர். சென்னையில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, பெங்களூரு ஐ.ஐ.எஸ்.,சில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) படித்தவர்.
1987ம் ஆண்டுகலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் பி.எச்டி., படிப்பை மேற்கொண்டார். 1995 முதல் 2003 வரை வாஷிங்டனில் உள்ள மேரிலேண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 2004 முதல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.