"கொரோனா சுனாமி!" 3 தலைமுறையில் இல்லாத மோசமான பாதிப்பு! அவ்வளவுதான் என கைவிரிக்கும் சீன மருத்துவர்கள்
பெய்ஜிங்: கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கச் சொல்லிப் போராடும் போது, அங்கு இந்தளவுக்கு நிலைமை மோசமாகும் என்பதைச் சீன மக்கள் துளியும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அங்கு கொரோனா உச்சம் தொட்டுள்ளதால் சீன மக்கள் திணறி வருகின்றனர்.
சீனாவில் இத்தனை காலம் ஜீரோ கோவிட் பாலிசி அமலில் இருந்தது. அதாவது ஓரிருவருக்கு கொரோனா வந்தாலே ஒட்டுமொத்தமாக அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் அங்கு கொரோனா கட்டுக்குள் இருந்தது.
உலக நாடுகள் கொரோனாவுடன் இணைந்து வாழ பழக வேண்டும் என்று கூறினாலும் கூட சீனா தொடர்ந்து இந்த ஜீரோ கோவிட் கொள்கையைப் பின்பற்றி வந்தது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது.

கட்டுப்பாடுகள் நீக்கம்
இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் தங்கள் வாழ்வாதாரங்களைக் கடுமையாகப் பாதிப்பதாகக் கூறி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அழுத்தம் அதிகரிக்கவே அந்நாட்டு அரசு வேறு வழியின்றி கட்டுப்பாடுகளை நீக்கியது. ஆனால், அப்போது போராடி மக்களுக்குக் கட்டுப்பாடுகளை இப்படி ஒரே இரவில் நீக்கினால், இந்தளவுக்கு மோசமான பாதிப்புகள் இருக்கும் எனத் துளியும் நினைத்திருக்க மாட்டார்கள். கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது முதலே அங்கு வைரஸ் பாதிப்புகள் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தினசரி வைரஸ் பாதிப்பு பல கோடியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா அலை
நிலைமை இப்படி கையை மீறிச் சென்றுள்ளதால் என்ன செய்வதென்றே புரியாமல் சீனா விழித்து வருகிறது. தினசரி பாதிப்புகள் பல லட்சத்தைத் தாண்டிவிட்டதால், தினசரி கொரோனா பாதிப்பு தரவுகளை வெளியிடுவதையே சீனா நிறுத்தியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகள் முழுக்க கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. குறிப்பாக வயதான நோயாளிகள் தொடர்ந்து மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். சில இடங்களில் மருத்துவமனைகள் நிரம்பிவிட்டதால், நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருக்க வேண்டிய மோசமான சூழலும் கூட ஏற்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பு
மருத்துவமனைகளுக்கு வரும் பெரும்பாலான நோயாளிகளுக்குத் தீவிர கொரோனா பாதிப்பால் ஏற்படும் நிமோனியா அறிகுறிகள் இருப்பதை அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சீனாவில் கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் கூட பாதிப்புகள் இந்தளவுக்கு மோசமானதாக இல்லை. இப்போதை அனைத்தையும்விட வைரஸ் பாதிப்பு பல மடங்கு மோசமாகியுள்ளது. மருத்துவமனைகள் மட்டுமின்றி மயானங்களிலும் கூட கூட்டம் நிரம்பி வழிவதால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது

3 தலைமுறைகளில் இல்லாத பாதிப்பு
இது தொடர்பாக பெய்ஜிங்கைச் சேர்ந்த மருத்துவர் ஹோவர்ட் பெர்ன்ஸ்டீன் கூறுகையில், "கடந்த மூன்று தலைமுறைகளில் இல்லாத அளவுக்குப் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பியுள்ளன. குறிப்பாகத் தீவிர நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஐசியு படுக்கைகள் கூட நிரம்பிவிட்டன. ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் பல அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா நோயாளிகள் பொதுவாக ஓரிரு நாட்களில் குணமடைய மாட்டார்கள். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

வேக்சின் போடாதவர்கள்
இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் கூட சிகிச்சை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் நாங்கள் இதற்குத் தயாராக இருக்கவில்லை. இதன் காரணமாகவே இப்போதுள்ள நிலைமை கட்டுக்குள் வைக்க முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார். இப்போது அங்கு பெரும்பாலும் மருத்துவமனைகளுக்கு வயதான முதியவர்களே தீவிர கொரோனா பாதிப்புடன் வருகிறார்கள். தீவிர பாதிப்புடன் வரும் மற்றவர்கள் பெரும்பாலும் வேக்சின் எடுத்துக் கொள்ளாத நபர்களாகவே உள்ளதாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா சுனாமி
கொரோனா பாதிப்பு இப்படி கையை மீறிச் சென்றுள்ளதால், பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. மேலும், தொடர்ந்து கொரோனா நோயாளிகளுடன் இருக்க வேண்டிய சூழல் காரணமாக அங்குப் பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் கூட கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. பல மருத்துவர்கள் கொரோனா பாதிப்புடனேயே வேறு வழியில்லாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேநேரம் நிலைமை வரும் காலங்களில் மேலும் மோசமாகலாம் என்றும் அஞ்சப்படுவதால். அதை மருத்துவர்கள் கொரோனா அலை இல்லை கொரோனா சுனாமி என்றே குறிப்பிடுகின்றனர்.

உயிரிழப்புகள்
அங்கு இதனால் உயிரிழப்புகளும் கூட தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முதியவர்கள் பலர் உயிரிழக்கக் கூடும். நிலைமை இதேபோல இருந்தால், சீனாவில் தினசரி 5000 பேர் வரை உயிரிழக்கக் கூடும் என்று பிரிட்டன் ஆய்வு நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது. நிலைமை இந்தளவுக்கு மோசமாக உள்ள போதிலும், அதைச் சமாளிக்கவே சீன அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. தங்கள் நாட்டில் உயிரிழப்புகள் பெரியளவில் இல்லை.. கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளதாக ஒரு பிம்பத்தை வைத்திருக்கவே அது முயல்கிறது.












Click it and Unblock the Notifications