எத்தகைய படையையும் வீழ்த்தும் திறன் சீனாவிற்கு உள்ளது... கொக்கரிக்கும் அதிபர்!
சீனா துண்டாடப்படுவதையும் எந்த நிலையிலும் அனுமதிக்க மாட்டோம் என்று அந்த நாட்டின் அதிபர் ஜிங்பிங் கூறியுள்ளார்.
பீய்ஜிங்: எந்த படையெடுப்பையும் சந்திக்க சீன ராணுவம் தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் கூறியுள்ளார்.
சீன ராணுவத்தின் 90வது ஆண்டு நிறைவை கொண்டாடும் கூட்டத்தில் வீரர்கள் மத்தியில் அதிபர் ஜி ஜிங்பிங் உரையாற்றினார். அப்போது அவர் "சீனாவின் எந்த பகுதியையும் பிரிக்கவும், உடைக்கவும் எந்த நபர், அமைப்பு, கட்சிகள், நாடுகளை எந்த வடிவிலும் அனுமதிக்க மாட்டோம். சீன மக்கள் அமைதியை விரும்புகின்றனர். எந்த ஆக்கிரமிப்பு, ஊடுருவலை விரும்பவில்லை. எத்தகைய படையெடுப்பையும் எதிர்கொண்டு வெற்றி பெரும் திறமை சீன ராணுவத்திற்கு உண்டு.
சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான செயல்கள் மூலம் லாபம் பெறலாம் எனயாரும் எதிர்பார்க்கக்கூடாது. எல்லாவற்றையும் வீழ்த்தும் படை பலம் எங்களிடம் உள்ளது" என்றும் அவர் பேசினார். சிக்கிம் செக்டாரில் இந்தியா சீனா இடையேயான எல்லைச் சண்டை நடைபெற்று வரும் நிலையில் சீன அதிபர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களில் சீன அதிபர் தங்களின் படைபலம் குறித்து வெளியிட்டுள்ள இரண்டாவது அறிவிப்பு இது. கடந்த ஜூலை 30ம் தேதி மக்கள் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்று பேசிய போது, "சீன ராணுவத்தினர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளது, அவர்களால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்த முடியும்" என்று கூறியிருந்தார்.
ஊடகங்கள், ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இருக்கும் கூட்டத்தில் சீனாவின் பகுதியான டோக்லாமில் இந்தியா ஊடுருவுவது போன்று அதிபர் ஜிங்பிங் பேசியுள்ளார். இந்தியாவிற்கான தேசிய ஆலோசகர் அஜித் தோவல் கடந்த மாதம் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாட்டு தேசிய பாதுகாவலர்களுடன் கடந்த ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சமயம் சீன அதிகாரி யாங் ஜீசியிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தோவல்- யாங்க் பேச்சுவார்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் ரகசியம் காக்கப்படுகின்றன.