இந்தியாவைவிட 3 மடங்கு அதிகமாக ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு.. யாருக்கு சவால்விடுகிறது சீனா?
பெய்ஜிங்: சீனா இந்த வருடன் 230 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்துக்காக ஒதுக்கி இருக்கிறது.
உலகிலேயே ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடு அமெரிக்கா. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது சீனா. 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது சீன ராணுவம்.
இந்தியா ராணுவத்துக்கு செலவிடும் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமான பணத்தை சீனா தன்னுடைய ராணுவத்துக்கு செலவிட்டு வருகிறது.

சீனா
சமீபகாலங்களில் சீனா, தொடர்ந்து இந்தியாவுடன் மோதல்போக்கை கடைபிடிக்கிறது. கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான ராணுவ மோதல், இந்திய எல்லைக்குள் வந்து இந்தியர்களை கடத்துவது உள்ளிட்ட செயல்களை தொடர்ச்சியாக செய்துவருகிறது சீன ராணுவம். அதோடு, ராணுவத்தில் பலமான அமெரிக்காவுடன் சரிசமமாக வளர, சீனா தனது ராணுவ பட்ஜெட்டை இந்த ஆண்டும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

சீன பட்ஜெட்
கடந்த 2021-ம் ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட்டை 6.8 சதவீதத்துக்கு சீனா உயர்த்தி இருந்தது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 504 கோடி) ஒதுக்கப்பட்டது. இது 2020ம் ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகம் ஆகும். 2022 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி 7.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது 230 பில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.17.57 லட்சம் கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவம்
சீன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி இந்தியாவில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட 3 மடங்கு அதிகமானது. உலகின் வலிமையான ராணுவமாக தன்னை கட்டமைக்கை ராணுவ பட்ஜெட்டை ஓவ்வொரு ஆண்டும் சீனா உயர்த்தி வருகிறது. சீனா ஒதுக்கிய பணத்தை விடவும் ராணுவத்துக்கு அதிகமாக செலவு செய்வதாகவும் சீனா மீது குற்றச்சாட்டு உள்ளது.

அதிபர் உத்தரவு
2035-ஆம் ஆண்டுக்குள் சீனாவின் படைகளை நவீனமயமாக வேண்டும் என்றும், 2049ஆம் ஆண்டுக்குள் போர்களில் சண்டையிட்டு வெற்றிபெறும் திறன் கொண்ட உலகத் தரம் வாய்ந்த ராணுவ சக்தியாக சீனா மாற வேண்டும் என்றும் அதிபர் ஸீ ஜின்பிங் உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து தான் ஒவ்வொரு ஆண்டும் சீனா ராணுவத்துக்கு அதிகமாக செலவு செய்துவருகிறது. கடந்த ஆண்டு சீன அதிபர் தலைமையில் போர் மற்றும் ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது சீனா.












Click it and Unblock the Notifications