போக்கிரி பட பாணியில், கைதிகளை தூங்கவிடாமல் சித்திரவதை செய்யும் சிஐஏ!
வாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தன்னிடம் சிக்கும் கொடும் குற்றவாளிகளை கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு அந்த நாட்டு அரசு தனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தியது. உளவு அமைப்பான சி.ஐ.ஏ இயக்குநருக்கு அதிக அதிகாரங்களை வாரி வழங்கியது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் அமெரிக்காவில் தீவிரவாதிகள் வாலாட்ட முடியவில்லை.
ஆனால், சி.ஐ.ஏ நடத்தும் விசாரணை முறையில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு அதிருப்தியுள்ளது. மிக மோசமான துன்புறுத்தலுக்கு கைதிகள் உள்ளாவதாக புகார் கூறப்படுவதுண்டு. இந்நிலையில், அமெரிக்க தகவல் சுதந்திர சட்டத்தின்கீழ் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், சிஐஏயில் நடைபெறும் விவகாரங்கள் அம்பலமாகியுள்ளன.
பிரபல ஆங்கில பத்திரிகையான கார்டியன் இந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. அதில், மருத்துவர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு எதிராக, கடும் உடல் ரீதியான சித்திரவதைக்கு கைதிகள் உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்டு்ள்ளது. தீவிரவாத நடவடிக்கையின்பேரில் கைதான அபு சுபைதா கடும் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முகத்தில் தண்ணீரை ஊற்றி மூச்சு திணற வைப்பது, முழுக்க இருட்டாக உள்ள அறையில் அடைத்து வைப்பது, 180 மணி நேரங்களுக்கும் அதிகமாக தூங்கவிடாமல் சித்திரவதை செய்வது போன்ற நடைமுறைகளை சிஐஏ பின்பற்றுகிறது. போக்கிரி திரைப்படத்தில் வில்லன் பிரகாஷ்ராஜை கமிஷனர் நெப்போலியன் தூங்கவிடாமல் செய்வதை போன்ற டெக்னிக் இதுவாகும்.