போய் சீனாவிடம் கேளுங்கள்.. வெளிப்படையாக கோபத்தை காட்டிய டிரம்ப்.. பிரஸ் மீட்டில் நடந்த பகீர் சண்டை!
இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கோபமாக திட்டிவிட்டு வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்: இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கோபமாக திட்டிவிட்டு வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அமெரிக்கா கொரோனாவிற்கு எதிரான போரில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. இதனால் டிரம்ப் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பும் நிலைக்கு உள்ளாகி உள்ளார்.
தன் பக்கம் இருக்கும் தோல்விகளை மறைப்பதற்காக அவர் சீனா மீதும், உலக சுகாதார மையம் மீதும் கடுமையான புகார்களை வைக்க தொடங்கி உள்ளார். அதிலும் சீனாவை டிரம்ப் மிக கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறார்.
சீனாவில் ஏதோ பயங்கரமான தவறு நடந்திருக்கு.. மிகவும் மோசமானது.. டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு!
பேட்டி அளித்து வருகிறார்
ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளிக்கும் பேட்டிகள் பெரிய விமர்சனத்தை சந்தித்தது. கிருமி நாசினிகள் கொரோனாவை கொல்கிறது. இதனால் உடலில் கிருமி நாசினியை உட்கொண்டால் கொரோனா குணமாக வாய்ப்புள்ளது என்று டிரம்ப் கூறியது பெரிய சர்ச்சையானது. இதனால் டிரம்ப் தினமும் செய்தியாளர் சந்திப்பில் பேசுவதற்கு பதில் சில நாட்கள் மட்டுமே பேசுவார் என்று விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
கேள்வி கேட்டார்
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர் சந்திப்பில் நீண்ட நாட்களுக்கு பின் பேசினார். அதில், அவரிடம் சிபிஎஸ் நியூஸ் நிறுவனத்தை சேர்ந்த வெய்ஜா ஜியாங் என்ற செய்தியாளர் முக்கியமான சில கேள்விகளை கேட்டார். அதன்படி, நீங்கள் அடிக்கடி அமெரிக்காவில் அதிக டெஸ்ட் செய்கிறோம் என்று கூறுகிறார்கள். மற்ற நாடுகளை மிக மோசமாக் மட்டம்தட்டி பேசுகிறீர்கள். இது இப்போது அவசியமா?
பகீர் கேள்வி
அது மிக முக்கியமா? அமெரிக்காவில் தினமும் பலர் பலியாகி வருகிறார்கள். இப்போது உலக நாடுகளுடன் போட்டி அவசியமா? சொல்லுங்கள் என்று வெய்ஜா ஜியாங் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி எழுப்பப்பட்டதும் டிரம்ப் கோபத்தின் உச்சத்திற்கே சென்றார். அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகம் முழுக்க மக்கள் இறக்கிறார்கள். தினமும் பலர் பலியாகிறார்கள். அது உங்களுக்கு தெரியுமா?
சீனாவிடம் கேளுங்கள்
நீங்கள் இந்த பலி குறித்த கேள்வியை என்னிடமே கேட்க கூடாது. அதை போய் சீனாவிடம் கேளுங்கள். ஓகே? என்று மிக கோபமாக குறிப்பிட்டார். அவர் கோபப்பட்ட வெய்ஜா ஜியாங் சீனாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சீனாவை சேர்ந்தவர் என்பதால் டிரம்ப் அவரிடம் கோபம் அடைந்தாக கூறப்படுகிறது. ஆனால் வெய்ஜா ஜியாங் விடாமல் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
வெய்ஜா ஜியாங் கேள்வி
தொடர்ந்து வெய்ஜா ஜியாங், நீங்கள் ஏன் என்னை இப்படி கை காட்டி பேசுகிறீர்கள்? என்னுடைய இனம் என்பதாலா? என்று கேள்வி கேட்டார். அதற்கு டிரம்ப், உங்களிடம் மட்டும் இல்லை. இது போன்ற கேவலமான கேள்விகளை கேட்டால் யாரிடம் வேண்டுமானாலும் நான் இப்படித்தான் பதில் சொல்வேன், என்று கூறினார். அதன்பின் அவரிடம் பேசாமல் வேறு சிலரிடம் டிரம்ப் கேள்வி கேட்கும்படி கூறினார் .
கேள்வி கேட்க சொன்னார்
ஆனால் அடுத்த செய்தியாளர் கேள்வி கேட்கும் முன், இன்னொரு செய்தியாளரிடம் கேள்வி கேட்கும்படி டிரம்ப் கையை மாற்றி நீட்டினார். இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அந்த செய்தியாளரும் கேள்வி கேட்கும் முன், டிரம்ப் வேகமாக செய்தியாளர் சந்திப்பில் இருந்து எதுவும் சொல்லாமல் பாதியில் கிளம்பினார். அவரின் இந்த செயல் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது.