ஒரு மத கூட்டம்.. கலந்து கொண்ட 9000 பேர்.. வேகமாக பரவிய கொரோனா.. தென் கொரியாவில் பயங்கரம்!
சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.
சியோல்: சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு ராணுவ வீரர்கள் வரை இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 2663 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 77658 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் நோயை குணமாக்குவேன் - மகாசிவராத்திரி நாளில் சவால் விட்ட பாபாஜி
எங்கே வெளியே
சீனாவிற்கு வெளியே தென்கொரியாவில்தான் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகிலேயே இந்த வைரஸ் அதிகம் தாக்கிய இரண்டாவது நாடு என்ற பெயரை தென் கொரியா பெற்று இருக்கிறது. ஒரே வாரத்தில் இந்த வைரஸ் 15 மடங்கு வேகமாக பரவி உள்ளது. நேற்று மட்டும் அங்கு 70 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. மொத்தமாக தென் கொரியாவில் 833 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
மிக மோசம்
இதில் அதிகம் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த வைரஸ் பரவும் வேகத்தை பார்த்தால் சீனாவை விட வேகமாக இந்த வைரஸ் தென் கொரியாவை பாதிக்கும் என்று கூறுகிறார்கள். சீனாவை விட இந்த வைரஸ் தென் கொரியாவில் பலரை பாதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தென் கொரியாவில் சீனா அளவிற்கு மனித பலமும், போதுமான மருத்துவ தொழில்நுட்ப வசதிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம் எப்படி
தென் கொரியாவின் ராணுவ வீரர்களுக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது. மொத்தம் 11 ராணுவ வீரர்களுக்கு இந்த வைரஸ் பரவி இருக்கிறது. மற்ற ராணுவ வீரர்களுக்கும் இது பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்கள் அமெரிக்க வீரர்களுடன் ஒன்றாக பயிற்சி செய்தவர்கள். இதனால் அவர்களுக்கும் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக தீவிர மருத்துவம பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
வேறு என்ன
அதேபோல் தென்கொரியாவில் ஷின்சேன்ஜி என்ற மத அமைப்பு உள்ளது. இது கிறிஸ்துவத்தில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மத குழு ஆகும். இந்த ஷின்சேன்ஜி வழிபாட்டு கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இதில் 9000 பேர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில 9000 பேர் ஒன்றாக வழிபாடு செய்தனர். இதில் 400 பேருக்கு தற்போது கொரோனா தாக்கி இருக்கிறது. ஷின்சேன்ஜி கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றவர்கள் தீவிரமாக சோதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஷின்சேன்ஜி குழு
இவர்களிடம் இருந்து எல்லோருக்கும் வைரஸ் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத பலருக்கும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஷின்சேன்ஜி கூட்டத்தை ஏற்பாடு செய்த நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். தென் கொரியாவில் வேகமாக இந்த பரவி வருவது பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.