நோ.. அவசரப்பட்டு லாக் டவுனை தளர்த்தினால் ஆபத்து.. கொரோனாவைரஸ் மீண்டும் தாக்கும்.. ஹூ வார்னிங்
ஊரடங்கை தளர்த்தினால் ஆபத்து என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது
ஜெனிவா: கொஞ்சம்கூட கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்தாமல் உலக நாடுகள் ஊரடங்கை மட்டும் தளர்த்தினால் பயங்கரமான ஆபத்து ஏற்படும். ஊரடங்கை அவசரப்பட்டு தளர்த்துவது என்பது வைரஸின் மறு தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனாவைரஸ் வேகமாக பரவி வருகிறது... கிட்டத்தட்ட 210 நாடுகளுக்கு பரவி, சுமார் 17 லட்சம் பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. 12 லட்சத்தும் மேலானவர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை நடந்து வருகிறது.
இதில் 49 ஆயிரம் பேரின் நிலைமை சீரியஸாக உள்ளதாக கூறப்படுகிறது.. இன்னொரு பக்கம் பாதிப்பு ஏற்பட்ட கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள ஆறுதல் செய்தியும் நமக்கு கிடைத்து வருகிறது.
எனினும், மருந்தே கண்டுபிடிக்க முடியாத இந்த வைரஸுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுதான் அனைவரையும் நிலைகுலைய வைத்து வருகிறது. அதனால்தான் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் மிக மிக தீவிரமான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன.. அதில் ஒன்றுதான் லாக்டவுன்!
பல்வேறு நாடுகள் தங்கள் நலனுக்காகவும், மேற்கொண்டு யாரும் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காகவும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.. அதேபோல ஒரு சில நாடுகள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தளர்த்தியும் வருகின்றனர். ஆனால் இப்படி ஊரடங்கை தளர்த்துவதால் அதி மோசமான, பயங்கரமான விளைவுகள் வரும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவிக்கும்போது, "ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் சில நாடுகள் மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று விதித்துள்ள கட்டுபாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளன.. அனைவரையும் போலவே உலக சுகாதார அமைப்பும் நாடுகள் விதித்துள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என விரும்புகிறது.
ஆனால் கொஞ்சம்கூட கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்தாமல் ஊரடங்கை மட்டும் தளர்த்தினால் பயங்கரமான ஆபத்துதான் ஏற்படும். இந்த நிலைமையை திறம்பட நிர்வகிக்க தவறினால் மாறுபாடான எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும். ஊரடங்கை தளர்த்தும் முன்பாக, நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.. அதற்கு போதுமான மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும்.. முக்கியமாக நோய் பாதிப்புகள் கட்டுக்குள் இருக்க வேண்டும்.. ஸ்கூல், ஆபீஸ்களில் இது குறித்த முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போதிய மருந்து பொருட்கள் கையிருப்பில் இருக்க வேண்டும். கொரோனா பீதியால் உலகமே வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றது.. ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஆகிய நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு கொஞ்சம் குறைந்துள்ளது.. ஒருவேளை ஊரடங்கு விலக்கப்பட்டாலும் கூட மக்கள் தொடர்ந்து சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.