ட்ரம்ப் அமெரிக்க அதிபரானதால் இந்திய ஐடி துறைக்கு பாதிப்பா? வல்லுநர்கள் சொல்வதை பாருங்கள்
வாஷிங்டன்: குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் அதிபராவதன் மூலம், இந்திய ஐடி துறையில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி அத்துறை சார்ந்த ஊழியர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
146 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது இந்திய ஐடி துறை. அமெரிக்க அரசின் ஹெச்1பி விசா திட்டத்தை நம்பிதான் பல அமெரிக்க ஐடி நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களை பணிக்கு அமர்த்துகின்றன. ஆனால் இந்த விசா முறைக்கு டொனால்ட் ட்ரம்ப் எதிராக பேசி வந்தார். அவர் அதிபரானால் ஐடி துறை ஆட்டம் காணுமோ என்ற அச்சம் அந்த ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இன்த அச்சம் தேவையில்லை என்கிறார் டெக் மகிந்திரா நிறுவன துணை தலைவர் வினீத் நாயர். அமெரிக்க பொருளாதாரத்தில் இந்திய ஐடி துறை கணிசமான பங்கு வகிப்பதால் இத்துறையை புதிய அதிபர் பகைக்க முடியாது என்பது அவரது கணிப்பு. "டிரம்பிடமிருந்து ஹெச்1பி விசாவுக்கு எதிரான நிலைப்பாடு வந்திருக்கலாம். ஆனால், அதுபோன்ற விசாக்களில், இந்திய ஐடி நிறுவனங்களின் பங்கு 20 சதவீதத்திற்கும் கீழ்தான்" என்கிறார் நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர்.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவின் சிறந்த நண்பராக இருப்பேன் என பிரசார நேரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டுக்காக, 2,50,000 ஹெச்1பி வகை விசாக்கள் கேட்டு அமெரிக்க அரசிடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் பெரும்பாலும் இந்திய ஐடி நிறுவனங்களாகும். கடந்த ஆண்டைவிட இது 65 ஆயிரம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.