கிழக்கு உக்ரைனில் சண்டை நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் திடீர் அழைப்பு!
மாஸ்கோ: மலேசிய விமான சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து கிழக்கு உக்ரைனில் சண்டை நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன் தினம், கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணித்த 295 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இது, உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆதரவும், ஆயுதங்களும் அளித்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இந்த நிலையில் அங்கு கடந்த சில மாதங்களாக அரசு படையினருக்கும், ரஷிய ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்து வருகிற சண்டையை இரு தரப்பினரும் நிறுத்திக்கொள்ள ரஷிய அதிபர் புதின் திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாஸ்கோவில் நேற்று அவர் கூறுகையில், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் வெகு விரைவில் சண்டையை நிறுத்தி விட்டு சமரச பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்" என்றார். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இரு தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டது பற்றி புதின் குறிப்பிடுகையில், "கிழக்கு உக்ரைனில் நடப்பதை மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் கவனித்துக்கொண்டிருக்கிறோம். இது மிகவும் மோசமானது. இது துயரமானது" என்றும் அவர் கூறினார்.
மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்யா கொடுத்த ஏவுகணையால்தால் என்று உக்ரைன் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் புதின்.