பாக்.கில் பயங்கரம்... எரிபொருள் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - 57 பேர் பலி
கராச்சி : பாகிஸ்தானில் எரிபொருள் லாரியும், பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 57 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து சிகார்பூர் நகருக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, எரிபொருள் ஏற்றி வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 57 பயணிகள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

விபத்துக் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் கொழுந்து விட்டு எரிந்த பேருந்து அணைக்கப் பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.
எரிபொருள் ஏற்றி வந்த லாரி, சாலையின் எதிர்ப்பக்கத்தில் தவறான பாதையில் படு வேகமாக வந்ததே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டவுடன் தப்பிச் சென்ற லாரி டிரைவரைப் போலீசார் தேடி வருகின்றனர். விபத்தில் சிக்கிய பேருந்தின் மேற்கூரையில் ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர். எனவே, பேருந்து தீப்பற்றியதும் அவர்கள் மேலே இருந்து குதித்து உயிர்த் தப்பியுள்ளனர். இல்லையென்றால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப் படுகிறது.
சமீபகாலமாக பாகிஸ்தானில் இதுபோன்ற சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மோசமான சாலைகளாலும், ஓட்டுநர்களின் கவனக் குறைவாலும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஆண்டுக்கு 4 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழப்பதாக, பாகிஸ்தான் நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications