பன்னாட்டு தமிழ் நடுவ தலைவர் டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் காலமானார்
அமெரிக்க பன்னாட்டு தமிழ் நடுவத்தின் தலைவர் டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் காலமானார்.
நியூயார்க்: பன்னாட்டு தமிழ் நடுவத்தின் தலைவரான டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் அமெரிக்காவில் காலமானார்.
இலங்கையின் கொழும்பில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வளர்ந்த டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் 1960களின் இறுதியில் அமெரிக்காவில் குடியேறினார். மருத்துவத் துறையில் கொடி கட்டிப் பறந்தார்.

குறிப்பாக நோயாளிகளுக்கு மயக்க மருந்து தரும் அனெஸ்தீசியா தொடர்பான மருத்துவத்தில் புகழ்பெற்றவர். தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உடனிருந்தவர்.
1984-ல் அமெரிக்காவில் பன்னாட்டுத் தமிழ் நடுவத்தை ஏற்படுத்தி தமிழீழ விடுதலைக்கான மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் தமிழகத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இம்மாநாடு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கும் அப்போது பஞ்சாட்சரம் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் சோசலிசத் தமிழீழம் குறித்து ஏகாதிபத்திய அமெரிக்காவில் விரிவாக பேச முடியாது என டாக்டர் பஞ்சாட்சரத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார் பிரபாகரன். டாக்டர் பஞ்சாட்சரத்தின் மனைவி மருத்துவர் பத்மினி சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். இலங்கை இனப்படுகொலை தொடர்பான நூல் ஒன்றையும் டாக்டர் பஞ்சாட்சரம் வெளியிட்டிருந்தார்.
டாக்டர் பஞ்சாட்சரத்துக்கு முரளி என்ற மகனும், ஆரபி என்ற மகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications