விஷம் நல்லது.. 80,000 தேள்கள், பாம்புகள் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் இளைஞர்!
எகிப்து நாட்டில் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர், தேளைப் பிடித்து, அதன் விஷத்தை எடுத்து, கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.
கைரோ: எகிப்து நாட்டில் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர் ஒருவர் தேள் பண்ணை வைத்து கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.
எகிப்து நாட்டை சேர்ந்தவர் முஹமத் ஹமிதி பாஷ்டா . தொல்லியல் துறையில் இளங்கலை படித்து வந்த அவர், படிப்பை பாதியில் கைவிட்டார். அடுத்து என்ன செய்யலாம் என யோசித்த அவருக்கு தேள்களின் விஷத்தால் தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்துகளுக்கு மேலை நாடுகளில் அதிக மவுசு இருப்பது குறித்து தெரியவந்தது.
இதையடுத்து கைரோ வெனாம் கம்பெனி (Cairo Venom Company) என்ற பெயரில் தேள் விஷம் உற்பத்தி செய்யும் பண்ணை ஒன்றை ஆரம்பித்தார் 25 வயதேயான முஹமத் ஹமிதி பாஷ்டா. எகிப்தில் உள்ள பாலைவனங்களில் தேள்களை தேடித்தேடிப் பிடித்து தனது பண்ணையில் வளர்க்க ஆரம்பித்தார் அவர்.
தற்போது எகிப்தில் பல்வேறு இடங்களில் பண்ணைகள் மூலம் 80 ஆயிரம் தேள்களையும், பாம்புகளையும் அவர் வளர்த்து வருகிறார். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பையும் அவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
யு.வி. லைட் மூலம் தேள்களை பிடித்து விஷத்தை பிரித்தெடுக்கும் பாஷ்டா, அதை ஐரோப்பா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார். விஷமுறிவு மருந்துகள் தயாரிக்க தேள்களின் விஷத்துக்கு டிமாண்ட் உள்ளது.
ஒரு கிராம் தேள் விஷம் ரூ.7 லட்சத்துக்கு விற்பனை செய்கிறார் பாஷ்டா. அதில் இருந்து 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டோஸ் விஷமுறிவு மருந்துகள் தயார் செய்யலாம். உயர் ரத்த அழுத்த மருந்துகளுக்கும் தேள்களின் விஷம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பாஷ்டாவின் தேள் விஷம் தொழிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.