பெண் ஒருவர் அதிபராகும் நேரம் வந்து விட்டது... ஆனால், அது நானில்லை என்கிறார் மிஷல்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் தற்போதைய அதிபர் ஒபாமாவின் மனைவியான மிஷல் ஒபாமா.
புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அமெரிக்காவில் வரும் 2016-ம் ஆண்டு நடக்க உள்ளது. இத்தேர்தலில், முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிலாரி கிளின்டன், ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல், ‘அமெரிக்க மக்கள் அடுத்த அதிபராக பெண் ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
பெண் அதிபர்...
நாட்டின் மிக உயரிய பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமனமாக வேண்டிய தருணம் வந்துவிட்டது.
மக்களின் எதிர்பார்ப்பு...
யாராக இருந்தாலும், போட்டியிடுபவர் திறமை வாய்ந்தவர்களாக இருந்தால், அவரை மக்கள் ஏற்கத் தயாராக உள்ளனர். நிறம், இனம், பொருளாதார நிலை என திறமைக் கொண்டவர்களிடம், மக்கள் எந்த பாகுபாட்டையும் பார்க்கமாட்டார்கள்.
திறமை வாய்ந்த பெண்...
அப்படிப்பட்ட திறமை வாய்ந்த ஒரு பெண், அதிபராக தேர்வாக வாய்ப்பு உள்ளது. அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை என்று நான் நினைக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசியல் ஆசையில்லை...
நேரடியாக ஹிலாரி கிளின்டனின் பெயரை குறிப்பிடாமல் மிஷல் பேசியதைத் தொடர்ந்து, அப்போது நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மிஷல், தனக்கு அரசியல் ஆர்வம் துளியும் இல்லை என்கிற ரீதியில் பதில் அளித்துள்ளார்.
ரகசிய விருந்து...
சமீபத்தில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஒபாமா ரகசிய விருந்து அளித்தது இங்கே நினைவு கூரத்தக்கது.