திருமணமான ஐந்தே மாதத்தில் இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை புற்றுநோயால் மரணம்
லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான எலினா பால்தசா கல்லீரல் புற்றுநோயால் காலமானார்.
உக்ரைன் நாட்டில் பிறந்த எலினா பால்தசா ஸ்காட்லாந்தில் வளர்ந்தார். அவரது தந்தை செர்ஜி பால்தசா இங்கிலாந்தில் உள்ள இப்ஸ்விச் நகருக்காக கால்பந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது எலினா இப்ஸ்விச்சில் குடியேறினார். அவருக்கு 19 வயது இருக்கையில் அவரது கல்லீரலில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நோய் மற்றும் காயங்களையும் தாண்டி எலினா 2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் 3வது சுற்று வரை தகுதி பெற்றார். உலக தர வரிசைப்பட்டியலில் 49வது இடம் வரை வந்தார்.
அவர் 11 ஒற்றையர் பிரிவு பட்டங்கள் வென்றுள்ளார். அவர் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இங்கிலாந்தின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக இருந்தார். அவர் கடந்த 2013ம் ஆண்டு டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகு இப்ஸ்விச்சில் எலினா பால்தசா அகடாமி ஆப் டென்னிஸை வைத்து நடத்தி வந்தார்.
அவர் தனது பயிற்சியாளரான செவரினோவை கடந்த ஆண்டு டிசம்பரம் மாதம் திருமணம் செய்தார். இதையடுத்து திருமணமான ஒரே மாதத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் எலினாவுக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவர் நேற்று தனது 30வது வயதில் காலமானார்.