ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு.. போராட்டங்களால் பற்றி எரிகிறது ஹம்பர்க் நகரம்
ஜெர்மனியில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பர்க் நகரில் போராட்டம் வெடித்ததில் நகரின் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் பற்றி எரிகின்றன.
ஹம்பர்க்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.
ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது வருகிறது. இதில் பயங்கரவாதம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
|
பலத்த பாதுகாப்பு
உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனிடையே, மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து மாநாட்டுக்கு முதல் நாள் ஹம்பர்க் நகரில் ஒன்று கூடினர்.
போலீஸார் எச்சரிக்கை
நரகத்துக்கு வாருங்கள் என்ற பதாகைகளை பிடித்தபடி தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி எச்சரித்தனர்.
|
கற்கள் வீச்சு
ஆனால், போராட்டக்காரர்கள் அதை காதில் போட்டுக் கொள்ளாததால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, போலீஸார் மீது தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசப்பட்டன.
|
தள்ளுமுள்ளு
பின்னர், இரண்டாவது நாளாகவும் முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நீடித்தது. ஹம்பர்க் நகரில் தடுப்புகளை தாண்டி மாநாடு நடைபெறும் இடத்துக்கு செல்ல முயன்ற போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் தடுப்பாண்களுக்கும், கார்களுக்கும் தீ வைத்தனர்.
தீ வைத்து போராட்டம்
தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை அணைத்த போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை போராட்டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தால் ஹம்பர்க் நகரம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் காயமுற்றனர். வன்முறை தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.