புதிய பெருந்தொற்று... கொடூர பாதிப்பு.. நாடு முழுவதும் 5 நாள் லாக்டவுன்.. ஜெர்மனி அதிபர் அதிரடி
பெர்லின்: பிரிட்டன் வகை கொரோனா காரணமாக அதிகரித்துள்ள பாதிப்பை புதிய பெருந்தொற்று என்று குறிப்பிட்டுள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், ஈஸ்டர் பண்டியை வருவதால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த 5 நாட்கள் முழு லாக்டவுனை அறிவித்துள்ளார்,
கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருகிறது. உருமாறிய கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது,
இதில் ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சமடைந்துள்ளது. குறிப்பாக, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தினசரி வைரஸ் பாதிப்பு இரட்டிப்பு வேகத்தில் அதிகரித்து வருகிறது.
தீவிர ஆலோசனை
இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், மாநில அரசுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பல மணி நேரம் நீட்டித்த இந்த ஆலோசனையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் ஐந்து நாட்கள் ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மீண்டும் லாக்டவுன்
ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது மக்கள் அதிகளவு ஒன்றுகூடுவார்கள் என்பதால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது. இதனால் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஜெர்மனியில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடுகள் அனைத்தும் ஆன்லைன் வழியே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மளிகைக் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய பொருந்தொற்று
இது குறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் கூறுகையில், "நிலைமை தற்போது மீண்டும் மோசமாகியுள்ளது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது" என்றார். பிரிட்டன் வகை கொரோனா காரணமாக வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இதை புதிய ஒரு பெருந்தொற்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா பரவல்
மேலும், இந்த புதிய வகை வைரஸ் மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுவதாகவும் அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தர். ஜெர்மனியில் தினசரி வைரஸ் பரவும் விகிதம் 100% அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 7,700 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதேபோல 50 பேர் உயிரிழந்துள்ளனர். நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாலேயே ஊரடங்கை அமல்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி பணிகள் மந்தம்
ஜெர்மனி தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இருப்பினும், ஐரேப்பியா ஒன்றியத்திற்குக் குறிப்பிட்ட தேதியில் தடுப்பூசிகளை டெலிவரி செய்யாமல் அஸ்ட்ராஜெனகா தாமதம் செய்து வருகிறது. இதனால் பிரிட்டனைப் போல ஜெர்மனியில் விரைவாகத் தடுப்பூசிகளைச் செலுத்த முடிவதில்லை. வைரஸ் பாதிப்பு அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.