7 வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து சீரழித்த பிரெஞ்சு ராணுவ வீரர்கள்
ஜெனீவா: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் அமைதி காக்கும் பணிக்காக வந்துள்ள பிரெஞ்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் படை வீரர்கள், சிறுமிகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுவரை இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், புதிதாக 6 புகார்கள் வந்துள்ளதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் 7 வயது சிறுமியை குடிநீர், மிட்டாய் தருவதாகக் கூட்டிச் சென்று பிரெஞ்சுப் படையினர் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐ.நா. விசாரணை
இந்தப் புகார்கள் தொடர்பாக தற்போது ஐ.நா. விசாரணைக் குழு விசாரணையில் இறங்கியுள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஐந்து சிறுமிகள் மற்றும் ஒரு பையனிடம் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.
ஐரோப்பிய யூனியன் ராணுவம்
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் அமைதி காக்கும் பணிக்காக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள்தான் இந்த அக்கிரமச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பிரெஞ்சுக்காரர்கள் மோசம்
இதுகுறித்து ஐ.நா.மனித உரிமை ஆணைய அதிகாரி ஜீத் ராத் அல் ஹுசேன் கூறுகையில், பிரெஞ்சுப் படையினர் மீதுதான் அதிக புகார்கள் வருகின்றன என்றார்.
2014ல் நடந்த அக்கிரமம்
7 வயது சிறுமியிடம் நிகழ்த்தப்பட்ட அக்கிரமச் செயலானது 2014ல் நடந்துள்ளது. தலைநகர் பாங்குய் அருகே உள்ள விமான நிலையப் பகுதியில் வைத்து இதைச் செய்துள்ளனர் பிரெஞ்சுப் படையினர்.
பல ஆயிரம் பிரெஞ்சு வீரர்கள்
முன்பு பிரான்ஸிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுதான் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு. தற்போது இந்த நாட்டைச் சேர்ந்த பல ஆயிரம் வீரர்கள் அமைதி காக்கும் பணி என்ற பெயரில் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு முழுவதும் முகாமிட்டுள்ளனர்.
கிறிஸ்தவர் - முஸ்லீம் மோதல்
2013ம் ஆண்டு பிற்பகுதியில் இங்கு கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து பிரெஞ்சுப் படையினர் இங்கு வந்து குவிந்தனர். இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்.
கண்ணீர் விட்டு அழுத அதிகாரி
இந்த செக்ஸ் வக்கிரச் செயல்கள் குறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. உதவி பொதுச் செயலாளர் அந்தோணி பான்பரி இதுகுறித்துக் கூறும்போது கண்ணீர் வடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கதேச போலீஸும்
இந்த அக்கிரமச் செயல்களில் ஈடுபட்டோர் வரிசையில் பிரெஞ்சுப் படையினர் தவிர தற்போது வங்கதேசம், காங்கோ, நைஜர், செனகல் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள போலீஸ் படையினரும் சேர்ந்துள்ளதாக பான்பரி கூறினார்.
முதல் முறையாக
இதுவரை இதுபோன்ற செக்ஸ் வக்கிரத்தில் ஈடுபடும் ஐநா அமைதி காப்புப் படை நாடுகளின் பெயர்களை ஐ.நா வெளியில் சொன்னதில்லை. தற்போதுதான் முதல் முறையாக அது அம்பலப்படுத்தியுள்ளது.