எவ்வளவு நாள் இருக்கப் போறோமோ.. எப்படி உருகுது பாருங்க ஐஸ் மலைகள்.. பேரழிவின் முன்னோட்டமா!
நூக், கிரீன்லான்ட்: இயற்கை தனது கோபத்தைக் காட்டத் தொடங்கி விட்டதாக எடுத்துக் கொள்வதா அல்லது இயற்கை நமக்கு விடுக்கும் எச்சரிக்கை என்று சொல்வதா.. உலகம் முழுவதும் உயர்ந்து வரும் கடல் நீர் மட்டத்தால் கிரீன்லேன்ட் பிரதேசத்தில் மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டுள்ளது.
வட அமெரிக்க கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பனிப் பிரதேசம்தான் இந்த கிரீன்லேன்ட். வடக்கு அட்லான்டிக் மற்றும் ஆர்க்டிக் கடல்களுக்கு மத்தியில் உள்ள தீவுப் பகுதி இது. இதன் நிலப்பரப்பு பெரும்பாலும் பனிப் படலம்தான். ராட்சத பனிப் பிரதேசம் இது. இதுதான் இன்று ஆபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒரே நாளில் பல ஆயிரம் கோடி கிலோ அளவிலான பனிப் பாறைகள் உடைந்து உருகி ஆறுகளாக ஓடிக் கொண்டுள்ளன. உலகமே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த இயற்கை சீற்றத்தை.
|
பனிப் பிரதேசம்
சமீப காலமாகவே கிரீன்லேன்ட் பனிப் பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன. புவி வெப்பமயமாதலும், அதிகரித்து வரும் கடல் நீர் மட்ட உயர்வுமே இதற்குக் காரணம். இந்த ஆண்டு மட்டும் இப்பகுதியின் வெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. இதனால்தான் பெருமளவிலான பனிப்பாறைகள் உருக ஆரம்பித்துள்ளன.
|
பல கோடி கிலோ ஐஸ்
இதன் உச்சமாக நேற்று ஒரே நாளில் பல கோடி கிலோ அளவிலான பனிப்பாறைகள் உருகி ஆறுகள் போல ஓடிக் கொண்டுள்ளன. வான் வெளியிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மிரள வைப்பதாக உள்ளது. அந்த அளவுக்கு கிரீன்லேன்ட் முழுவதுமே கடும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதை காட்டுகின்றன இந்த காட்சிகள்.
|
அதிகரிக்கும் வெப்பம்
கோடைகாலத்தில் வெயில் அதிகரிக்கும்போது இது போல நடப்பது இயல்புதான் என்று கூறப்பட்டாலும் கூட தற்போது அதிக அளவிலான பனி உருகல் என்பது கவலை தருவதாக உள்ளதாக சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
|
அழிவு
இந்த ஆண்டு அதிக அளவிலான பனிப் படலம் உருகி வருவதாகவும் இது கிரீன்லேன்ட் பிரதேசத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பூமிக்கும் கவலை தரும் அம்சம் என்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். மனிதனால் ஏற்படும் இந்த புவி வெப்பமயமாதல் பிரச்சினையில் சிக்கி கிரீன்லேன்ட் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
|
என்னாத்துக்கு கோவம்!
இருக்கப் போவது எத்தனை காலமோ.. இதற்குள்தான் இந்த மனிதர்கள் எப்படி அடித்துக் கொள்கிறார்கள்.. கோபம் கொள்கிறார்கள்.. கொலை வெறி பூணுகிறார்கள்.. கோவப்படுகிறார்கள்.. ஆங்காரம் காட்டுகிறார்கள்.. மாறுங்க மனிதர்களே மாறுங்க!