புளோரிடாவை புரட்டிப்போட்ட இர்மா புயல்- மிதக்கும் குடியிருப்புகள்- இருளில் தவிக்கும் மக்கள்
இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புரட்டி போட்டுள்ளது. குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மியாமி: இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் புரட்டிப் போட்டது. மணிக்கு 200 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டுவதால், மரங்கள் வேரோடு சரிந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் சிக்கி தவிக்கின்றனர்.
அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் உலகிலேயே 2வது அதி பயங்கர புயலாகும். கடந்த 2 நாட்களாக கரீபியன் தீவுகள், கியூபாவை சூறையாடிய இர்மா, வேகமாக நகர்ந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கியது. இர்மா புயலையொட்டி, கடந்த ஒரு வாரமாக புளோரிடா மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாகாணம் முழுவதற்கும் புயல் அபாயம் இருப்பதால், ஒட்டு மொத்த மக்களும் குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
பள்ளி, சர்ச், விளையாட்டு உள்அரங்கங்கள் என 400க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் முகாம்களில் பெரும்பாலான மக்கள் தஞ்சமடையத் தொடங்கினர்.
புளோரிடாவின் தாழ்வான பகுதியான கீஸ் தீவை நேற்று காலை 7 மணிக்கு புயல் தாக்கத் தொடங்கியது. புயல் நகர நகர மணிக்கு 200 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியது. 15 முதல் 20 அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆர்ப்பரித்தன.
கனமழை காரணமாக, கீஸ் தீவுக்கூட்டத்தின் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. காலை 9 மணிக்கு கீஸ் தீவை புயல் முழுமையாக மையம் கொண்டது. சூறாவளியில் சிக்கி மரங்கள் வேரோடு சரிந்தன.
புயல் வலுவடைந்ததைத் தொடர்ந்து மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மியாமியில் அதிகபட்சமான பகுதிகளில் மக்கள் இருளில் தவிக்கின்றனர். மியாமி நகரின் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் சரிந்து காடு போல் காட்சி அளிக்கிறது.
புயலையொட்டி, மாகாணத்தின் அனைத்து நகரங்களிலும் திங்கட்கிழமை வரை அரசு அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் சந்தோஷ் ஜா கூறுகையில், கடந்த 48 மணி நேரமாக தெற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு அட்லாண்டிக் தீவுகளின் அனைத்து பகுதிகளில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம் முழு தூதரகமும் இதற்காக பணியாற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.