தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் சட்ட அமைச்சர் ராணா சனாவுல்லாவுக்கு எதிராக பைசலாபாத்தில் நடந்த கட்சிப் பேரணியின்போது வன்முறையைத் தூண்டி விட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை பைசலாபாத்தில் நடந்த மோதலின்போது சனாவுல்லாவின் ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். சனாவுல்லாவின் வீடும் தாக்குதலுக்குள்ளானது. இதையடுத்து சனாவுல்லா போலீஸில் புகார் கொடுத்தார்.
இம்ரான் மட்டுமல்லாமல், பாகிஸ்தான் முஸ்லீம் லீ்க் அவாமி தலைவர் ஷேக் ரஷீத், இம்ரான் கான் கட்சியின் தலைவர்கள் ஷா மஹமூத் குரேஷி, ஆரிப் அல்வி, அசாத் உமர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் மீதும் வழக்குப் போட்டுள்ளனர் போலீஸார்.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் முறைகேடு நடந்ததாக கூறி தொடர் போராட்டங்களில் இம்ரான் கட்சியினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.