ஏமன் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் 2,500 மெட்ரிக் டன் கோதுமை வழங்கிய இந்தியா
சனா (ஏமன்): ஏமன் நாட்டின் ஹுதைபா துறைமுகத்தில் வந்திறங்கிய 2500 மெட்ரிக் டன் இந்திய கோதுமை ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) மூலம் ஏமனுக்கு மனிதாபிமான உதவியாக வழங்கப்பட்டது.
இந்த கோதுமையினை இந்திய வெளியுறவுத்துறையின் வளைகுடாப் பகுதிக்கான தலைவர் மிர்துல் குமார் உலக உணவுத் திட்ட இயக்குநர் பிசௌ பராஜுலி முன்னிலையில் ஏமன் நாட்டின் திட்டம் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பு துறை முதல் துணை அமைச்சர் டாக்டர் அப்துல்கவி ஏ நுஹ்மான், வேளாண்மைத் துறை அமைச்சர் ஃபரீத் முஜாவர், அப்துல் ரசாக் யஹ்யா அஹமத் அல் அஸ்ஹல், அஹ்மத் அல் குஹ்லானி உள்ளிட்ட ஏமன் அரசுப் பிரதிநிதிகளிடம் வழங்கினர்.
இந்தியத் திருநாட்டின் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொண்ட ஏமன் நாட்டின் திட்டத்துறை அமைச்சர் முஹம்மது அல் சாதி தாங்கள் இந்திய நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார். இதற்காக பெரும் முயற்சி செய்த உலக உணவு திட்ட நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இந்த உதவி இந்தியா மற்றும் ஏமன் உறவில் மற்றுமொரு மைல்கல் என்றார் துணை அமைச்சர் அப்துல் கவி.
உலக உணவு திட்ட இயக்குநர் பிசௌ இந்தியா வழங்கிய 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 2,500 மெட்ரிக் டன் கோதுமையின் மூலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு 121,300 மக்களுக்கு உணவளிக்க முடியும் என்றார். இவ்வுதவியின் மூலம் ஏமன் நாட்டில் உணவு இல்லாத நிச்சயமற்றதன்மை முடிவுக்கு வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் ஏமன் இந்திய தூதரக அதிகாரி வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.