ஆப்கானில் இந்திய துணை தூதரகம் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல்- 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
மசார்-இ ஷரீப்: ஆப்கானிஸ்தானில் மசார் இ ஷரீப் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது தலிபான்கள் தீவிரவாதிகள் நேற்று நள்ளிரவு பயங்கர தாக்குதல் நடத்தினர். இதையடுத்து நடைபெற்ற மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணம் மேற்கொண்டு ஒருவாரம் கூட நிறைவடையாத நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 3-வது நாளாக இன்றும் தாக்குதல் நீடித்து வருகிறது.
இதனிடையே ஆப்கானிஸ்தானிலும் இந்திய துணைத் தூதரகத்தை இலக்கு வைத்து நேற்று நள்ளிரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானின் வடக்கு பகுதியில் மசார் இ ஷரீப் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்குள் ஆயுதம் தாங்கிய 4 தீவிரவாதிகள் நேற்று நள்ளிரவு உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதையடுத்து துணை தூதரகத்துக்கு பாதுகாப்பில் இருந்த இந்திய- திபெத் எல்லை போலீஸ் கமாண்டோ படையினரும் ஆப்கான் போலீசாரும் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.
{video1}
இருதரப்புக்கும் இடையே 20 நிமிட நேரம் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. தூதரகத்துக்குள் உள்ளே நுழைய முடியாத தீவிரவாதிகள் அருகே உள்ள ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து அங்கிருந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இம்மோதலின் முடிவில் தாக்குதல் நடத்த வந்த 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மசார்-இ ஷரீப் துணை தூதரகத்தில் இருந்த இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது ஹெராத் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.