கம்யூனிசத்தை பரப்பினால் 4-10 ஆண்டு வரை சிறை! இந்தோனேசியாவில் புதிய சட்டம்.. ஏன் தெரியுமா?
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய சட்டத்திருத்தம் நேற்று(டிச.06) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், கம்யூனிச சித்தாந்தத்தை பரப்புவோர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிச எதிர்ப்பு கொள்கை என்பது வளர்ந்த நாடுகளில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், வளர்ந்து வரும் நாடுகளில் இக்கொள்கை பின்பற்றப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வழக்கமாக மதம் சார்ந்த நாடுகளில் கம்யூனிச அமைப்புகள், கட்சிகள் தடை செய்யப்படுவது இயல்புதான்.
அந்த வகையில், அமெரிக்கா கூட சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற அனுமதி கோர முடியாது" என்று கூறியிருந்தது.
மத்திய அரசு நலத்திட்டங்களைப் பெற தமிழக அமைப்பு சாரா தொழிலாளர் 37% பேர் மட்டுமே பதிவு!
தடை
தற்போது இதனைத் தொடர்ந்து இந்தோனேசியாவும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. அதாவது டிசம்பர் 6ம் தேதியான நேற்று, அந்நாட்டு நாடாளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்றியிருந்தது. அந்த மசோதாவில், திருமணத்தை தாண்டிய உறவு, கருக்கலைப்பு, முற்போக்கு அரசியலை பரப்புவது தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்க்சிய-லெனினிச அமைப்புடன் தொடர்பு உள்ளவர்களுக்கு 10 ஆண்டுகளும், கம்யூனிச சித்தாந்தத்தை பரப்புவோர்களுக்கு 4 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் அந்நாட்டு அரசு சட்டத்தை திருத்தி இருக்கிறது. இதில் கருக்கலைப்பு சட்டத்தை பொறுத்த அளவில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
மரண தண்டனை
அதேபோல மற்ற குற்றங்களில் வெளிநாட்டவர்கள் ஈடுபட்டாலும் அது சட்ட விரோதம் என்று புதிய சட்டம் கூறியுள்ளது. இந்நாட்டில் உள்ள மதங்களில் இஸ்லாம் முக்கியமானதாகும். தன்பால் ஈர்ப்பாலர்களை இம்மதம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், புதிய சட்டத்தில் தன்பால் ஈர்ப்பாலர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மரணை தண்டனையை அந்நாட்டு மக்கள் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர். ஆனால், இந்த முறை மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தில் மரண தண்டனை நீட்டிக்கப்படுவதாகவும், ஆனால் வேறு வழியே இல்லாத நிலையில் இது பின்பற்றப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மறுபுறம் இந்த புதிய சட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
சட்டம்
ஆக இப்படியாக திருத்தப்பட்ட சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் 30 நாட்களில் சட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். இதற்கிடையில் குடியரசுத் தலைவர் ஆட்சேபனை தெரிவித்து இதனை ரத்து செய்ய விரும்பினால் அதற்கான ஆணையை பிறப்பிக்கலாம். ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவானது முழுமையாக அமலாக 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. நேற்று மசோதா நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவர் இன்னும் இதில் கையெழுத்திடவில்லை.
சர்வாதிகாரி
இந்தோனேசியாவை பொறுத்த அளவில் இந்நாடு மத அடிப்படைவாத நாடாகும். இங்கு, இஸ்லாம், புராட்டஸ்டன்டிசம், கத்தோலிக்கம், இந்து, பௌத்தம் மற்றும் கன்பூசியனிசம் என ஆறு மதங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நாட்டில் கம்யூனிச எதிர்ப்பு என்பது தொடக்கத்திலிருந்தே நீடித்து வருகிறது. அதாவது, 1965-66 காலகட்டத்தில் இந்நாட்டில் அமெரிக்க பின்னணியுடன் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அப்போது அந்நாட்டின் புதிய அதிபராக 'சுஹார்டோ' பதவியேற்றார். இதுதான் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கான இருண்ட காலம் என்று சொல்லப்படுகிறது. அதுவரையில் உலக அளவில் நான்காவது மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்த இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரே ஆண்டில் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது.
ஒடுக்குதல்
அதன் முக்கிய தலைவர்கள் தொடங்கி அடிமட்ட உறுப்பினர், ஆதரவாளர்கள் வரை அனைவரும் தேடி தேடி கொலை செய்யப்பட்டனர். இந்தோனேசியா சுத்திகரிக்கப்படுகிறது என்று அதிபர் சுஹார்டோ இச்சம்பவத்தை நியாயப்படுத்தினார். இந்த சுத்திகரிப்பு பணியில் சுமார் 10 லட்சம் பேர் பிணமாக்கப்பட்டனர். அதிபர் அறிவிப்பை வெளியிட கொலைப் பட்டியலை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் புலனாய்வு அமைப்புகள் தயாரித்து கொடுத்தன. பட்டியலை பெற்ற ராணுவம் கொலைகளை கொன்று குவித்தது. அப்போதிலிருந்து இப்போது வரை கம்யூனிச கட்சி மற்றும் சித்தாந்தத்தை அந்நாட்டு அரசு தொடர்ந்து ஒடுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.