ஈராக் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திடம் இருந்து முக்கிய எண்ணெய் வயல்கள் மீட்பு!
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வசம் இருந்த முக்கிய எண்ணெய் வயல்களை குர்திஷ் படையினர் மீட்டுள்ளனர்.
ஈராக்கில் அரசுக்கு எதிராக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்' இயக்கத்தினர் போரிட்டு வருகின்றனர். அங்கு மொசூல், திக்ரித், கிர்குக் மற்றும் குர்திஷ்தானில் உள்ள நகரங்களையும் கைப்பற்றினர். அவற்றை உள்ளடக்கி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர்.
இதனிடையே அமெரிக்காவின் உதவியுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றிய நகரங்களை குர்திஷ்தானின் அரசு படைகளான பேஷ்மெர்கர் மீட்டு வருகின்றன.
ஏற்கனவே மொசூல் பகுதியில் உள்ள மொசூல் அணை மற்றும் சில நகரங்களை குர்திஷ் படைகள் கைப்பற்றின. இந்த நிலையில் நேற்று மொசூல் அருகே அயின் சலா என்ற இடத்தில் ஐ.எஸ்>ஐ.எஸ்> வசம் இருந்த 3 எண்ணெய் வயல்களை கைப்பற்ற குர்திஷ் படைகள் அங்கு தாக்குதல் நடத்தின.
பதிலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கமும் தாக்குதல் நடத்தின. இந்த யுத்தத்தால் எண்ணெய் வயல்கள் தீ பிடித்து எரிந்தது. கடுமையான துப்பாக்கி சண்டைக்கு பிறகு அயின்சலா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்கள் மீட்கப்பட்டன. ஷுமார் பகுதியில் உள்ள பல கிராமங்களையும் குர்திஷ் படைகள் மீட்டுள்ளன.
இதனிடையே குர்தீஷ் படைகளின் முன்னேற்றத்தை தடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், குர்திஷ் இனத்தை சேர்ந்த ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்படும் கொடூர காட்சி இடம் பெற்றுள்ளது.