சவுதி அரேபியாவின் புதிய மன்னர் விரைவில் அறிவிப்பு?
ரியாத்: சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் புதிய மன்னர் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்.
சவுதி மன்னர் அப்துல்லாவுக்கு 91 வயதாகிறது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகமாக புகை பிடிக்கும் மன்னர் அப்துல்லாவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சவுதியின் இளவரசராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் சல்மான் தான் நீண்டகாலமாக அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். 2012ஆம் ஆண்டு இளவரசர் நயீப் காலமானதைத் தொடர்ந்து சல்மான் இளவரசரானார். அவர் சீனா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
ரியாத் மாகாணத்தின் ஆளுநராக 1963 ஆம் ஆண்டு முதல் சல்மான் தான் இருந்து வருகிறார். இவர்தான் 1980களில் ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன் அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியவர். முஜாஹிதீன் இயக்கங்களுக்கு மாதந்தோறும் 25 மில்லியன் டாலர் நிதி உதவி கொடுத்தவர் இவர். செர்பியாவுக்கு எதிரான போஸ்னியா முஸ்லிம்களின் போருக்கு நிதி உதவி கொடுத்தவரும் இந்த சல்மான்தான்.
இவரது மகன்களில் ஒருவரான கலீத், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான வான்வழித் தாக்குதலில் பங்கேற்றவர். சவுதி ஊடகங்களில் பெரும்பாலானவை சல்மான் குடும்பத்தினர் வசமே உள்ளது. சல்மானுக்கு கடந்த 2013-ல் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது இடத்துக்கான புதிய இளவரசர் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மன்னர் அப்துல்லா உடல்நலம் குன்றியிருப்பதால் விரைவில் புதிய மன்னர் யார் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அரபு நாடுகளில் அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சவுதி அரேபியாவில் புதிய மன்னர் தேர்வும் எந்த ஒரு சர்ச்சைக்கும் இடம் தராமல் அறிவிக்கப்பட இருப்பதாகவே கூறப்படுகிறது.