குளோரின் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள்: ஆஸி. "திடுக்" தகவல்
பெர்த்: ஐ.எஸ் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதுடன் அவற்றை மேம்படுத்த வல்லுநர்களை நியமித்து வருவதாகவும் ஆஸ்திரேலியா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
ஈராக், சிரியாவில் பெரும்பாலான நகரங்களை ஆக்கிரமித்துள்ளது ஐ.எஸ். தீவிரவாத இயக்கம். அத்துடன் தங்களால் பிணைக்கைதியாக பிடித்த வெளிநாட்டவரையும் ஈவிரக்கமின்றி மிகக் கொடூரமாக படுகொலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சர்வதேச கருத்தரங்கம் ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் ஜூலி பிஷப், இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இருக்கிறது என்றார்.
மேலும் கடந்த ஜனவரியில் வடக்கு ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடி குண்டு தாக்குதல் உள்ளிட்ட தடயங்களை சேகரித்த போது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன; அத்துடன் தம் வசம் உள்ள ரசாயன ஆயுதங்களை மேம்படுத்துவதற்கு வல்லுநர்களையும் ஐ.எஸ். தீவிரவாத கும்பல் நியமித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.