ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஒரு நாள் வருமானம் மட்டுமே ரூ. 6.37 கோடி!
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டி பணம் பறிப்பது, வரி விதித்தல் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 37 லட்சம் சம்பாதிப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தான் இன்று உலகின் சக்திவாய்ந்த மற்றும் பணக்கார தீவிரவாத அமைப்பாக உள்ளது. ஈராக்கில் உள்ள சில எண்ணெய் கிணறுகள் அந்த அமைப்பின் பிடியில் உள்ளது.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வருமானம் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வருமானம்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மக்களை கடத்தி மிரட்டி பணம் பறித்து வருகிறது. அவ்வாறு மிரட்டி பணம் பறிப்பது, வரி விதிப்பதன் மூலம் மட்டும் அந்த அமைப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 37 லட்சம் வருமானம் கிடைக்கிறது.
கொள்ளை
செலவை குறைக்க ஐஎஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ராணுவ உபகரணங்களை கொள்ளையடிக்கிறார்கள். நிலங்கள், கட்டிடங்களை அபகரிக்கிறார்கள், குறைந்த அளவு ஊதியம் வழங்குகிறார்கள். ஈராக்கின் முக்கிய நகரங்கள் ஐஎஸ்ஐஎஸ் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணம்
எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருகின்றபோதிலும், அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வான்வெளித் தாக்குதல் நடத்துகின்றபோதிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் தனது அன்றாட செலவுகளை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு போதிய பணம் உள்ளது.
எண்ணெய் கிணறுகள்
அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து தாக்கி வருகின்றன. இதனால் தீவிரவாதிகளுக்கு வருமானம் பாதித்தாலும் அவர்கள் எண்ணெய்யை மட்டும் நம்பி இல்லை. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் எண்ணெய்யை விற்பனை செய்வதை விட தங்கள் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்கிறார்கள்.
சம்பளம்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மாதாமாதம் ஏற்படும் பெரிய செலவே உறுப்பினர்களுக்கு ஊதியம் அளிப்பது தான். ஊதியத்திற்கு மட்டும் மாதாமாதம் ரூ.19 கோடி முதல் ரூ. 63 கோடி செலவாகிறது.