ஈராக்கின் முக்கிய நகரான ரமாதியை கைப்பற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் உள்ள ரமாதி நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசப்படுத்தியுள்ளனர் என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். இந்நிலையில் அவர்கள் ஈராக்கில் உள்ள ரமாதி நகரை தங்கள் வசப்படுத்திவிட்டதாக அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி படுத்த படுக்கையாக இருப்பது அந்த அமைப்பினரின் செயல்களை பாதிக்கவில்லை என்று தெரிகிறது.
முக்கிய தலைவர்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அடுத்த தலைவராகவிருந்த அபு அஃப்ரி பலியானது, முக்கிய தலைவர் அபு சயப் அமெரிக்க படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டது தீவிரவாதிகளை சிறிதும் பாதிக்கவில்லை என்பதையே அவர்கள் ரமாதி நகரை கைப்பற்றியுள்ளது தெரிவிக்கிறது.
ரமாதி ஏன்?
ரமாதி நகரை கைப்பற்றுவது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு முக்கியமாக இருந்தது. ஏனென்றால் அன்பார் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரம் ரமாதி தான். ரமாதியுடன் சேர்த்து பலுஜா, திக்ரித் மற்றும் மொசுல் ஆகிய முக்கிய பெருநகரங்கள் ஐஎஸ்ஐஎஸ் வசமாகியுள்ளன.
போர்
ரமாதி நகரம் தீவிரவாதிகளின் பிடியில் சென்றுவிடாமல் இருக்க ஈராக் அரசு அங்கு ராணுவ வீரர்களை அனுப்பி வைத்தது. இதையடுத்து ரமாதியில் ராணுவத்தின் கை ஓங்கி இருந்தது. முக்கிய அரசு கட்டிடங்களில் பறந்த ஐஎஸ்ஐஎஸ் கொடிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் அந்நகரை தீவிரவாதிகள் தங்கள் வசமாக்கிவிட்டது அரசுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது.
வான்வெளித் தாக்குதல்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இருக்கும் இடங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் கடந்த 2 நாட்களாக வான்வெளித் தாக்குதல் நடத்தி வந்தன. அதையும் தாண்டி தீவிரவாதிகள் ரமாதி நகரை கைப்பற்றியுள்ளனர். தரை வழியாக தீவிரவாதிகளை தாக்க போதிய படைகள் இல்லாததே இந்த தோல்விக்கு காரணம் ஆகும்.
தீவிரவாதிகள்
ஈராக் ராணுவ வீரர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலமுறை தோற்கடித்துள்ளனர். ஈராக் ராணுவத்தை தங்களால் தோற்கடிக்க முடியும் என்பதை தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார்கள்.
அபு சயப்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அபு சயபை கொன்றுவிட்டதாக அமெரிக்கா கடந்த சனிக்கிழமை அறிவித்தது. சயப்பின் இழப்பு தீவிரவாதிகளுக்கு பேரிடியாக இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்துள்ளது அமெரிக்கா. சயப்பின் பொறுப்பில் சில எண்ணெய் கிணறுகள் இருந்தன. அவரது இறப்பால் கள்ளச் சந்தையில் எண்ணெய் விற்பனை பாதிக்கப்படலாம்.
ரமாதி
ரமாதி நகரை ஈராக் ராணுவமும், தீவிரவாதிகளும் மாற்றி கைப்பற்றி வருகிறார்கள். அதனால் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ரமாதி நகர் விரைவில் ராணுவத்தின் வசம் வரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.