ஆபிசில் சாப்பிட்ட உடனே தூக்கம் வருதா.. அப்போ அண்ணனுக்கு ஒரு 'நேப் பாக்ஸ்' பார்சல்!
ஊழியர்கள் குட்டித் தூக்கம் போடுவதற்காக நேப் பாக்ஸ் என்ற பெட்டியை உருவாக்கியுள்ளது ஜப்பான்.
டோக்கியோ: நீண்ட நேரம் பணிபுரியும் ஊழியர்கள், வேலைக்கு இடையே குட்டித் தூக்கம் போட்டுக் கொள்ள வசதியாக, நேப் பாக்ஸ் என்ற பெட்டியை உருவாக்கியுள்ளது ஜப்பான்.
மதிய உணவுக்குப் பின் தூங்கினால் தொப்பை போடும் என்ற பயத்தினாலேயே நம்மில் பலர் அதனை தவிர்த்து விடுவோம். ஆனால் கடுமையான வேலைப்பளுவுக்கு இடையே சரியாக 22 நிமிடங்கள் மட்டும் குட்டித் தூக்கம் போட்டால், அது உடம்புக்கு நல்லது என்கிறது ஆய்வுகள். அதனாலேயே அந்தக் குட்டித் தூக்கத்தை பவர் நேப் என குறிப்பிடுகின்றனர்.
3 ஆண்டில் 4 லட்சம் பேரா? குடியுரிமையை கைவிட்ட இந்தியர்கள் - கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டனில் சிட்டிசன்
அப்படியான குட்டித் தூக்கத்திற்குப் பிறகு ஊழியர்கள் திறமையாக வேலை செய்ய முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதனாலேயே பல நிறுவனங்கள் இத்தகைய குட்டித் தூக்கத்திற்கு தாமாகவே அனுமதி அளிக்கின்றன.
நேப் பாக்ஸ்
ஆனால் என்னதான் அலுவலகம் ஓகே சொன்னாலும், சேரில் உட்கார்ந்து கொண்டே தூங்கினால் எனக்கு தூக்கமே வராது என்பவர்களுக்காக ஜப்பான் நிறுவனம் அருமையான கண்டுபிடிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹொகைடோ தீவுகளின் ப்ளைவுட் சப்ளை நிறுவனமான கோயோஜு கோஹன் நிறுவனமும், டோக்கியோ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இடோகி என்ற ஃபர்னிச்சர் கடையும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த பெட்டிக்கு நேப் பாக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சகல வசதிகளும் உண்டு
இன்னமும் விலை நிர்ணயிக்கப்படாத இந்தப் பெட்டி, செங்குத்தான நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக இருப்பதால் இதில் படுத்துத் தூங்க முடியாது. ஆனால் உட்கார்ந்து கொண்டே நிம்மதியாக தூங்குவதற்கு சவுகர்யமாக கை, கால்கள், தலை மற்றும் கழுத்து என அனைத்தையும் பொருத்திக் கொள்ளும்படி உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
கழிவறையில் குட்டித் தூக்கம்
இந்த நேப் பாக்ஸ் பற்றி, இடோகி நிறுவன இயக்குநர் சீகோ கவாஷிமா கூறுகையில், "ஜப்பானில் நீண்ட நேரம் பணி புரியும் ஊழியர்கள், பணிச்சுமை காரணமாக அவ்வப்போது கழிவறைகளில் குட்டித் தூக்கம் போட்டு திரும்பும் பழக்கம் உள்ளது. அப்படித் தூங்குவது நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல. எனவே தான் அதற்கு மாற்றாக இந்த நேப் பாக்ஸை கண்டுபிடித்துள்ளோம்.
எதிர்பார்ப்பு
இதனை ஊழியர்கள் சவுகரியமாக பயன்படுத்தலாம். இது ஜப்பானியர்களால் நிச்சயம் வரவேற்கப்படும். உலகிலேயே அதிக நேரம் ஊழியர்கள் வேலை செய்யும் நாடாக ஜப்பான் உள்ளது. எனவே நீண்ட நேரம் உறங்காமல் வேலை பார்க்கும் ஊழியர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, குட்டித் தூக்கத்தின் நன்மைகளை அறிந்த நிறுவனங்களும் இதனை வாங்கி தங்கள் ஊழியர்களின் பயன்பாட்டுக்குத் தரும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.