ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறை... பாகிஸ்தானில் அரசு சார்பாக 'கருப்பு தினம்' அனுசரிப்பு
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் இன்று அரசு சார்பாக கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த 8-ந் தேதி மோதல் நடைபெற்றது. இதில் ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி புர்ஹான் முசாபர் வானி உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு செல்போன்கள், இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதலில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதுகாப்பு படையினர் உள்பட 300-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் வன்முறையில் கொல்லப்பட்டோருக்கு இன்று துக்கம் அனுசரிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதையடுத்து அந்நாட்டின் பல பகுதிகளில் அரசு ஊழியர்கள் உள்பட பலரும் இன்று கருப்பு உடைகளை அணிந்து கருப்பு தினத்தை அனுசரித்தனர்.
வெளிநாடுகளில் பாகிஸ்தான் தூதரகங்களில் பணியாற்றுபவர்களும் இன்று கருப்பு தினத்தை அனுசரித்தனர். ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் பிரச்சனையை தங்களுக்கு சாதகமான அம்சமாக மாற்றிக்கொள்ள பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது.
இதனிடையே மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத், இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் நகரை நோக்கி ரத யாத்திரை நடத்தினார். பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானிக்கு இன்று ஜனாசா தொழுகை நடத்தவும் ஹபீஸ் சயீத் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.