உங்களது வாழ்வை உயர்த்த தவறிவிட்டேன்... கதறி அழுத வடகொரியா தலைவர் கிம் ஜாங்... நம்ப முடிகிறதா!!
பயோங்யாங்: கொரோனா தொற்று காலத்தில் தனது மக்களுக்கு ஆதரவாக நிற்கத் தவறியதற்கு மன்னிப்பு கோரி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தேம்பி அழுதார். இது புதிய காட்சியாக இருந்தாலும், அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.
வடகொரியாவின் ஆளும் கட்சியின் 75வது ஆண்டு விழா கடந்த 10ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது ராணுவ அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதில் பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங், ''இந்த நாட்டுக்காக உழைத்து தியாகம் செய்து வரும் உங்களுக்கு (ராணுவத்தினர்) எனது நன்றி. மக்களின் வாழ்க்கைத்தரத்தை இவ்வளவு நாள் உயர்த்துவதற்கு தவறிய என்னை மன்னித்து விடுங்கள்.
வடகொரியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. கடல் ஆழத்திற்கும், வானம் உயரத்திற்கும் என் மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்த தவறி விட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.
நாட்டை வழி நடத்தி வந்த கிம் II ஜாங் மற்றும் கிம் ஜாங் இல் இருவரின் பொறுப்பும் என் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களது நலத்தை உயர்த்த என்னுடைய அர்ப்பணிப்பு போதுமானதாக இல்லை. ஆனாலும், என் நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வருகின்றனர். எனது தேர்வை ஆதரித்து, முடிவுகளுக்கும் கட்டுப்படுகின்றனர்'' என்றார்.
இவ்வாறு கிம் ஜாங் பேசிக் கொண்டு இருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுதார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காட்சியைப் பார்த்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். உலகமே முடிவுக்கு வருகிறதா? என்ன நடக்கிறது? என்று கேள்விகள் எழுப்பியுள்ளனர். கொடுங்கோல் ஆட்சி நடத்துபவர் வடகொரியா தலைவர், அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே உலக நாடுகளுக்கு தெரியாது என்றெல்லாம் கூறப்படும். இந்த நிலையில்தான் இந்தக் காட்சியும் அரங்கேறியுள்ளது.