லண்டன் தீ விபத்து.. பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு.. கண்ணீர் மல்க அஞ்சலி
லண்டன்: லண்டனில் 24 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு லண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. 24 தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் உள்ள 120 குடியிருப்புகளில் சுமார் 600 பேர் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அந்த கட்டிடத்தில் உள்ள 120 பிளாட்டுகளிலும் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள பலர் மாடியில் இருந்து குதித்தனர். இதில் பலத்த காயமடைந்தனர்.யார், எங்கே இருக்கிறார்கள்? என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் கரும்புகை சூழ்ந்து கொண்டது.
இந்நிலையில், கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதனிடையே, லண்டன் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு நகரவாசிகள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
புதன்கிழமை எரியத் தொடங்கிய இந்த கட்டிடம் இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வந்தது. காரணம் வீடுகள் அனைத்தும் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்ததுதான். வெள்ளிக்கிழமை மாலைதான் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.