ஐரோப்பிய யூனியனின் ‘சகாரோவ்’ மனித உரிமைப் பரிசைப் பெற்றார் மலாலா
பாரீஸ்: ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமைப் பரிசை நேற்று நடந்த விழாவில் பாகிஸ்தான் சிறுமி மலாலா பெற்றுக் கொண்டார்.
பெண் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமியான மலா யூசுப்சாய், தாலிபன்களால் சுடப்பட்டு மரணத்தோடு போராடி, தற்போது லண்டனில் தனது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். தொடர்ந்து மலாலாவின் உயிருக்கு தாலிபன்கள் குறி பார்த்து வரும் நிலையில், அவர்களுக்கு அஞ்சாமல் மலாலாவும் தனது போராட்டத்தை தொடர்ந்தே வருகிறார்.
இந்நிலையில், மலாலாவின் செயல்களைக் கவுரவிக்கும் வகையில், ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்க தீர்மானித்திருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப் பட்டது.
இதனையடுத்து, நேற்று கிழக்கு பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போர்க் நகரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஸ்க்கல்ஸ் மலாலாவிடம் சகாரோவ் பரிசை வழங்கி வாழ்த்தினார்.
50 ஆயிரம் யூரோக்கள் ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசை உலகெங்கும் உள்ள மனித உரிமை பிரசாரகர்களுக்கு அர்பணிப்பதாக மலாலா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.