அனோபிலஸ் கொசு இனத்தை ஒழித்து மலேரியாவை ஒடுக்கும் நூதன யுக்தி... லண்டன் ஆய்வில் தகவல்
லண்டன்: மலேரியாவைக் கூண்டோடு ஒழிக்க ஒரு நூதன உத்தியைக் கண்டுபிடித்துள்ளது லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரியின் ஆய்வாளர்கள் குழு.
வழக்கமாக அனோபிலஸ் கேம்பியே என்றழைக்கப்படும் கொசு வகைதான் மனிதர்களிடையே மலேரியாவைப் பரப்புகிறது. அதிலும் பெண் அனோபிலஸ் கொசுக்கள்தான் நம்மைக் கடித்து, மலேரியாவைப் பரப்பும் பிளாஸ்மோடியம் பேத்தோஜனைப் பரப்புகிறது. ஆண் கொசுக்கள் மனிதர்களைச் சீண்டுவதில்லை.
இதை மனதில் கொண்டு ஆண் அனோபிலஸ் கொசுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் வகையில் இந்த ஆய்வுக் குழு தனது ஆய்வை நடத்தி முடிவையும் வெளியிட்டுள்ளது.
ஆண் கொசுக்கள் உற்பத்தி...
இவர்களின் ஆய்வு, அதிக அளவில் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து, பெண் கொசுக்களின் எண்ணிக்கையை கடுமையாக குறைத்து கடைசியில் அனோபிலஸ் கொசுக்களின் இனத்தையே அழிக்க முடியும் என்று கூறுகிறது.
கொசு இனமே அழிந்து விடும்....
அதாவது பெண் கொசுக்கள் இல்லாமல் போய், ஆண் கொசுக்கள் திண்டாடி, கடைசியில் அந்தக் கொசு இனமே அழியும் நிலையை ஏற்படுத்த முடியுமாம்.
புதிய முறை...
இதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர். அதாவது, அனோபிலஸ் கொசுக்களில் பாலின சீரழிவை ஏற்படுத்துவதற்காக ஒரு ஜீனை எடுத்து மாதிரி ஆண் கொசுவில் செலுத்தினர்.
ஆண் கொசுக்கள் மட்டுமே பிறக்கும்...
இப்படி ஜீன் மாற்றம் செய்யப்பட்ட அந்த ஆண் கொசுவின் டிஎன்ஏவில் என்டோநியூக்ளியேஸ் என்ற என்சைம் சுரக்கச் செய்யப்பட்டது. இந்த என்சைமானது, எக்ஸ் குரோமோசோம்களை அமுக்கி, ஒய் குரோமோசோம்களை மட்டுமே பரப்பும் தன்மை கொண்டது. இதன் விளைவாக அந்த ஜீன் மாற்றம் செய்யப்பட்ட கொசு மூலம் ஆண் கொசுக்கள் மட்டுமே பிறக்கும் நிலை ஏற்பட்டதாம்.
ஒய் குரோமோசோம்களின் ஆதிக்கம்...
வழக்கமாக கொசுக்களின் விந்து உற்பத்தியின்போது எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்களின் எண்ணிக்கை 50-50 என்ற அளவில் இருக்கும். ஆனால் ஜீன் மாற்றம் செய்யப்பட்ட காரணத்தால், அந்த நிலை மாறி ஒய் குரோமோசோம்களே அதிகம் இருக்கும் நிலை ஏற்பட்டதாம்.
நாலே தலைமுறை தான்....
இப்படி ஜீன் மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களால் நான்கு தலைமுறைகளுக்கு பெண் கொசுக்களின் உற்பத்தி அடியோடு காலியாகி விடும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
இது தான் ஒரே வழி...
இப்படி பாலின சீரழிவை ஏற்படுத்துவதன் மூலம் இந்தக் கொசு இனமே குறைந்து போய் அல்லது பெண் கொசுக்களே இல்லாத நிலையை ஏற்படுத்தி, மலேரியா பரவுவது அடியோடு கட்டுப்படுத்த முடியும் என்பது இந்த ஆய்வின் வாதமாகும்.