விமானம் கடலுக்குள் விழவில்லை, என் மகன் சாகவில்லை: சீன பயணியின் தந்தை கதறல்
பெய்ஜிங்: தெற்கு இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய விமானம் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆனால் அதை நம்ப சீன பயணிகளின் உறவினர்கள் தயாராக இல்லை.
மாயமான மலேசிய விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடும் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது. இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் இரண்டு பொருட்கள் கிடைத்துள்ளது என்றும், அவை மாயமான விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விமானம் கடலுக்குள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
லிடோ ஹோட்டல்
பெயங்ஜிங்கில் உள்ள லிடோ ஹோட்டலில் மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு விமானம் குறித்த தற்போதைய தகவல்களை தெரிவிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
சீனர்கள்
ஆஸ்திரேலிய பிரதமர் விமானம் பற்றி தெரிவித்ததை சீன பயணிகளின் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதை அவர்கள் நம்பத் தயாராகவில்லை.
மகன்
மலேசிய விமானத்தில் பயணித்த சீனர் ஒருவரின் தந்தையான வென் வான்செங் கூறுகையில், என் மகன் உயிரோடு தான் இருக்கிறான். என் மகன் உயிரோடு தான் இருக்கிறான். இந்த செய்தியை நான் நம்ப மாட்டேன். என் மகன் இறந்துவிட்டான் என்று நான் நம்புவேன் என்று நினைக்கிறீர்களா? என் மகன் கடலுக்குள் உள்ளான் என்று என்னால் நம்ப முடியுமா? என்று கேட்டார்.
உறவினர்கள்
விமானம் குறித்து புதிய தகவல் கிடைத்ததாக கூறுகிறார்கள். அதன் பிறகு அது உண்மை இல்லை என்கிறார்கள். நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். எந்த செய்தியும் உறுதிப்படுத்தும் வரை நாங்கள் அதை நம்ப மாட்டோம் என்று பயணிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.