அரபு நாடுகள் மட்டுமல்ல... நபிகள் நாயகம் அவதூறு தொடர்பாக இந்திய தூதருக்கு மலேசிய அரசு சம்மன்
கோலாலம்பூர்: நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தொடர்பாக இந்திய தூதர் விளக்கமளிக்குமாறு மலேசிய அரசு சம்மன் அனுப்பி இருக்கிறது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
லேட்டாக வந்த கார்த்தி சிதம்பரம்! இங்க வாங்க.. இங்க வாங்க.. வரவேற்று மேடையேற்றிய ஸ்டாலின்!
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.
வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதுகுறித்து மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளதாவது, "நுபுர் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்ப உள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தை பதிவு செய்வோம்." என்றார்.
கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.
அரபு நாடுகள் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, அமீரகம், குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.
மலேசிய அரசு சம்மன்
இதே போல் மலேசிய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இஸ்லாமிய வெறுப்புணர்வை கலைய இந்திய அரசு தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், அமைதியை குலைத்து வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக மலேசியாவில் உள்ள இந்திய தூதர் விளக்கமளிக்குமாறு அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது.