மாலத்தீவில் தொடரும் அரசியல் குழப்பம்... உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து அதிபர் கடிதம்
அரசியல் தலைவர்களை விடுவிக்க கோரும் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது என அதிபர் யாமீன் தொடர்ந்து மறுத்து வருவதால் மாலத்தீவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மாலே: மாலத்தீவில் முன்னாள் அதிபர் நஷீத் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என அதிபர் யாமீன் அப்துல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் மாலத்தீவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
மாலத்தீவில் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் நஷீத் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்; எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்த 12 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்பது அந்நாட்டின் உச்சநீதிமன்ற உத்தரவு. ஆனால் இதை அதிபர் யாமீன் ஏற்க முடியாது என தெரிவித்து வருகிறார்.
நஷீத் உள்ளிட்டோரை விடுதலை செய்தாலும் 12 எம்.பி.க்களுக்கு பதவியை திருப்பி கொடுப்பதாலும் தமது ஆட்சி கவிழ்க்கப்படும் என்பது அதிபர் யாமீனின் அச்சம். முன்னாள் அதிபர் நஷீத் கட்சியுடன் 12 எம்.பி.க்கள் இணைந்துவிட்டதால் நாடாளுமன்றத்தில் யாமீனுக்கு பெரும்பான்மை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறார் அதிபர் யாமீன். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்புக்காக அதிபர் யாமீனை உச்சநீதிமன்றம் கைது செய்ய உத்தரவிடலாம் அல்லது பதவி நீக்கம் செய்யலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. ஆனால் அதிபர் யாமீனோ உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கக் கூடாது என ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் குழப்பம்
அத்துடன் நாடாளுமன்றத்தையும் யாமீன் முடக்கியுள்ளார். இதனால் மாலத்தீவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி தலைநகர் மாலேவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

விமான நிலையத்தில் கைது
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பிக்களில் இருவர் நேற்று வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினர். அவர்கள் இருவரும் மாலே விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
தீர்ப்பை ஏற்க முடியாது என கடிதம்
தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சையத் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய அதிபர் யாமீன் முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்பதை விளக்கி மூன்று கடிதங்களை அதிபர் யாமீன் அனுப்பி வைத்துள்ளார்.

சீனா மவுனம்
இக்கடிதங்கள் மீது உச்சநீதிமன்றம் எத்தகைய முடிவெடுக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அதிபர் யாமீன் செயல்பட வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் மாலத்தீவில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள சீனாவோ மவுனம் காத்து வருகிறது. தமது நாட்டவரை தற்போதைய நிலையில் மாலத்தீவுக்கு செல்ல வேண்டாம் என்று மட்டும் சீனா அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications