மாயமான பிறகு 4 மணி நேரம் பல நூறு மைல்கள் பறந்தது மலேசிய விமானம் - அமெரிக்கா தகவல்
நியூயார்க்: மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் வானில் பறந்ததுள்ளது. அதன் பின்னர் ஏது ஏதோ ஒரு அடையாளம் தெரியாத இடத்திற்குத் திருப்பி விடப்பட்டிருப்பதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இந்த விமானம் கடத்தப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. சம்பந்தப்பட்ட விமானத்திலிருந்து தானாகவே அனுப்பப்படும் தகவல்கள் மூலம் இதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.
போயிங் விமானமான அதில் பொருத்தப்பட்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் என்ஜினிலிருந்து விமானம் பறப்பது தொடர்பான தகவல்கள் ஆட்டோமேட்டிக்காக தரைத் தளத்திற்கு வந்து சேரும். அதை ஆய்வு செய்த அமெரிக்கக் குழு இப்படி சந்தேகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் ரேடார் பார்வையிலிருந்து தப்பிய பின்னர் பல நூறு மைல்கள் அது தொடர்ந்து பறந்துள்ளது.
அதாவது அந்த விமானம் சீனா செல்லும் வழியில் பாதியிலேயே எங்கோ திருப்பி விடப்பட்டுள்ளது. அதன் பின்னர்தான் அது ராடார் பார்வையிலிருந்து தப்பியுள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து அது பறந்துள்ளது. பின்னர் எங்கோ அது போயுள்ளது.
எதற்காக விமானம் கூடுதலாக பல நூறு மைல்கள் சென்றது, எதற்காக வழக்கமான பாதையில் இருந்து மாறிச் சென்றது என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் இந்த புதிய சந்தேகம் மூலம் விமானம் கடத்தப்பட்டு எங்காவது வைக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. விமானம் தொடர்ந்து பறந்ததைக் கண்டுபிடித்துள்ள அமெரிக்கா, அடுத்து அது தற்போது எங்கு உள்ளது என்பதையும் கண்டுபிடித்துச் சொல்லும் என்று நம்புவோம்.