ஆப்கான் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வீசிய குண்டு.. சதாமை பயமுறுத்த தயாரிக்கப்பட்டது!
21,600 பவுண்ட் எடை கொண்ட மிகப்பெரிய ஜிபியு - 43 வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா வீசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் நிலைகள் மீது மிகப்பெரிய ஜிபியு - 43 வெடிகுண்டை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இது உண்மையில், மறைந்த சதாம் உசேனை அச்சுறுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட குண்டாகும்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஆச்சின் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். ஆப்கன் நேரப்படி இரவு 7.32 மணிக்கு எம்.சி-130 ரக போர் விமானம் இந்த அதி பயங்கர குண்டை சுமந்து சென்று வீசியதாக பெண்டகன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் நேற்று இரவு உலகையே பரபரப்புக்குள்ளாக்கி விட்டது. காரணம், அமெரிக்கா வீசிய குண்டு சாதா குண்டு அல்ல, வெடிகுண்டுகளின் தாய் என்று சொல்லக் கூடிய அளவுக்கு மிகப் பெரியதாகும்.
வெடிகுண்டுகளின் தாய்
ஐ.எஸ் அமைப்பினருக்கும் அமெரிக்காவும் இடையில் நடந்துவரும் கடும் சண்டையில் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் மலைக்குகைகளை கேடயமாக பயன்படுத்தி செயல்படுகின்றனர். அதனை தகர்க்கும் வகையில் இந்த "வெடிகுண்டுகளின் தாய்" வீசப்பட்டது என பென்டகன் செய்தி தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் கூறியுள்ளார். இது அணுகுண்டு அல்ல என்று அமெரிக்க ராணுவ தலைமைச் செயலகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
பெரும் உயிர்சேதம்
ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுரங்கங்கள், அவர்கள் பதுங்கி வாழ பயன்படுத்தப்படும் குகைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் மிகப்பெரிய உயிர்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தீவிரவாதிகள் மட்டுமல்லாது அப்பாவி மக்களும் இத்தாக்குதலில் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தின் இத்தாக்குதல் ஆப்கானிஸ்தானில் வாழும் அப்பாவி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
எடை எவ்வளவு
இந்த வெடிகுண்டு 21,600 பவுண்ட் அதாவது 9797 கிலோ கிராம் எடை கொண்டது இந்த வெடிகுண்டு. இந்த வெடிகுண்டுகளின் தயாரிப்பு செலவு 16 மில்லியன் டாலர்கள். 20 அடி நீளம் கொண்ட இதில், 9 ஆயிரம் டன் வெடிபொருள்கள் அடங்கியிருக்கும்.
சதாம் ஹூசைனை மிரட்ட
ஈராக் போர் தொடங்குவதற்கு முன் கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்கா இதைப் பரிசோதித்துப் பார்த்தது. அதை "சைக்கலாஜிக்கல்" தாக்குதல் என்பார்கள். அதாவது மன ரீதியில் பீதியைக் கிளப்பி பயமுறுத்துவது. இந்த வெடிகுண்டு ஆல்பர்ட் எல்வெட்மோர்ட்ஸ் என்பவரால் ஏர்போர்ஸ் ஆராய்ச்சிக்கூடாத்தில் தயாரிக்கப்பட்டது. சதாம் ஹூசைனை அச்சுறுத்துவதற்காக இது தயாரிக்கப்பட்டது. ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்ட இந்த வெடிகுண்டு இலக்கை துல்லியமாக தாக்கும் தன்மை கொண்டது.
முதன் முறை தாக்குதல்
ஜிபியு -43 வெடிகுண்டு பரிசோதனையின் போது, 32 கிலோமீட்டர் சுற்றளவிற்கு புகை மூட்டம் ஏற்பட்டது. இதுவரை எந்தப் போரிலும் அமெரிக்கா இந்த வெடிகுண்டை பயன்படுத்தியதில்லை. போர்விமானத்தில் எடுத்துச் சென்று வீசப்பட்டதும் இதுதான் முதன்முறையாகும்.