வடகொரிய கிம் ஜாங் பதவியேற்பில் மாமா சரியா கை தட்டலையாம்.. மரண தண்டனை!
சியோல்: ராணுவ புரட்சிக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப் பட்டு, வட கொரிய அதிபரின் உறவினரான முன்னாள் ராணுவ துணை தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக உலக நாடுகளிடமிருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வாங்கியபடி இருக்கிறது கொரியா. ஆனபோதும், அது தனது கடமையே கண்ணாக தொடர்ந்து செயலாற்றிக் கொண்டு தான் இருக்கிறது.
அந்தவகையில், தற்போது வட கொரியா அதிபர் கிம்ஜாங்யுன்னின் தந்தை வழி அத்தையின் கணவரும், வட கொரியாவின் ராணுவத் துணை தளபதியாகவும் பணியாற்றிய ஜங்சாங்தயக் (67க்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது,
அதிபருக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் அதிகாரம்மிக்கவராக செயல்பட்டவர் ஜங்சாங். இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங்யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாகக் கைது செய்யப் பட்டார். அவருடன் அவரது உதவியாளர்கள் 2 பேரும் சேர்த்துக் கைது செய்யப் பட்டனர்.
கைது செய்யப் பட்ட அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து உதவியாளர்கள் 2 பேரும் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டனர். இந்நிலையில், ஜங்சாங் தயபாக்கும் நேற்று தூக்கிலிடப்பட்டார். அதன் மூலம் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கிம் ஜாங்- யுன்னை பதவியேற்ற போது, இவர் கை தட்டவில்லையென்றும், அதன் பழி வாங்கும் நடவடிக்கையாகவே இந்த மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளதாகவும் கொரிய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இவரை துரோகி என்றும், நாயை விட கேவலமானவர் என்றும் கொரிய செய்தி நிறுவனம் வர்ணித்துள்ளது.
ஜாங்கின் மரண தண்டனைக்கு அமெரிக்கா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.