கார்கில் போருக்கு காரணம் நாங்கள்தான்.. உண்மையை ஒப்புக்கொண்ட பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார். கார்கில் போருக்கு பாகிஸ்தானின் இந்த மீறல் நடவடிக்கை காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை என மொத்தம் 85 நாட்கள் கார்கில் போர் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 205 கி.மீ தொலைவில் உள்ள கார்கில் பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் திடீரென ஊடுருவலில் ஈடுபட்டன. இதனையடுத்து போர் தொடங்கியது. இந்தியா-பாகிஸ்தான் என இரண்டு தரப்பிலும் உயிர்ச்சேதம் அதிகமாக இருந்தாலும், இந்தியாதான் இதில் ஜெயித்தது.

இந்த போருக்கு முக்கிய காரணம் லாகூர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதுதான். இது குறித்து ஏற்கெனவே இந்தியா குற்றம்சாட்டியிருந்தது. இருப்பினும் பாகிஸ்தான் இதனை மறுத்து வந்த நிலையில், தற்போது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று லாகூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நவாஸ் ஷெரீஃப் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பேசிய அவர், அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டார்.
"கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி நாங்கள் 5 அணு குண்டுகளை வைத்து சோதனை நடத்தினோம். அப்போது இந்திய பிரதமர் வாஜ்பாய் இங்கு வந்து எங்களுடன் அமைதி ஒப்பந்தம் போட்டார். இருப்பினும் நாங்கள் அதனை மீறிவிட்டோம். அதாவது 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தம் போடப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே எங்கள் துருப்புக்கள் காஷ்மீரில் ஊடுருவலை மேற்கொண்டது. இது எங்களுடைய தவறுதான்.
நாங்கள் அணு ஆயுத சோதனையை அமெரிக்காவின் எதிர்ப்பை மீறிதான் நடத்தினோம். அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், இந்த சோதனையை நடத்தக்கூடாது என்று எங்களுக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக கூறினார். இருப்பினும் இதனை மறுத்து நாங்கள் சோதனையை மேற்கொண்டோம்.
அப்போது பாகிஸ்தானின் பிரதமாக இம்ரான் கான் இருந்திருந்தால், பணத்தை வாங்கிக்கொண்டு சோதனையை நடத்தாமல் தவிர்த்திருப்பார்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications